ஜனநாயகக் கடமையை செய்ய முடியலையே.... புலம்புகிறார் கிங்பிஷர் மல்லையா!
கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓட்டுபோடும் ஜனநாயகக் கடமையை செய்ய முடியவில்லையே என விஜய் மல்லையா வருத்தம்
லண்டன்: வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டதால், லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ள கிங்பிஷர் நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா, ஜனநாயகக் கடமையை செய்ய முடியவில்லையே என்று புலம்புகிறார்.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி, அதை செலுத்தாமல் ஏமாற்றியதாக, அதன் தலைவர் விஜய் மல்லையா மீது பல வங்கிகள் வழக்கு தொடர்ந்தன. அதையடுத்து, 2016 மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்றார் விஜய் மல்லையா.
அவரை நாடு கடத்தி வருவது தொடர்பாக இந்திய அரசு தொடர்ந்துள்ள வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் விஜய் மல்லையா இன்று ஆஜரானார்.
அப்போது கர்நாடகாவில் அடுத்த மாதம் நடக்கும் சட்டசபை தேர்தல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, கர்நாடகாவைச் சேர்ந்த நான், கர்நாடகா சார்பில் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளேன். தேர்தலில் ஓட்டுப் போடுவது என்பது ஒருவருடைய ஜனநாயகக் கடமை. ஆனால், அந்தக் கடமையை செய்ய முடியாத வகையில், என்னுடைய பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துள்ளனர். அதனால் என்னால் ஓட்டுப் போட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.