மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வர.. லண்டன் விரைந்தது சிபிஐ குழு
யுனைடட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் உரிமையாளருமான விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த சிபிஐ அதிகாரிகள் லண்டன் சென்றுள்ளனர்.
லண்டன்: ரூ.9,000 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பிய விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வருவது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழு லண்டன் போயுள்ளது.
இந்தியாவில் பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரூ.9,000 கோடி கடனை பெற்ற மல்லையா அவற்றை திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். அவ்வப்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் அவர் தலைகாட்டி வந்தனர்.
அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும் பலனில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 18-ஆம் தேதி மல்லையா லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் வெஸ்ட்மிஸ்டர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது.
இந்நிலையில் அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. எனினும் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு காரணம், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான, அயல்நாட்டிடம் ஒருவரை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தின் சிக்கலான செயல்முறைகள் தான்.
இந்நிலையில் ராகேஷ் அஸ்தானா தலைமையில் சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கத் துறையினரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இங்கிலாந்துடன் விவாதிப்பதற்காக லண்டன் சென்றுள்ளனர். அவர்கள் இங்கிலாந்து சட்ட நிபுணர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
மேலும் இந்தியாவுக்கு இந்த வாரத்தில் வருகை தரவுள்ள இரு நாட்டு உள்துறை செயலாளர்கள் முன்னிலையில் மல்லையாவை நாடு கடத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று தெரிகிறது.