அமெரிக்காவில் விஜயகாந்த்... உற்சாகமான புகைப்படங்கள் வெளியீடு... குஷியில் தேமுதிகவினர்
அமெரிக்காவில் விஜயகாந்த் தனது குடும்பத்திருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
வாஷிங்டன்: அமெரிக்காவில் விஜயகாந்த் தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளன. இதனால் கட்சியினர் குஷியாகியுள்ளனர்.
விஜயகாந்துக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. எனினும் தமிழக அரசுக்கு எதிராக தனது எதிர்ப்பையும் கருத்துகளையும் அறிக்கை மற்றும் டுவிட்டர் வாயிலாக வெளிப்படுத்தி வந்தார்.
நீட், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, எட்டு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து தேமுதிகவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் மனைவி பிரேமலதாவுடன் அவர் கலந்து கொண்டு உற்சாகப்படுத்தினார்.
மேல் சிகிச்சை
இந்நிலையில் அவருக்கு தொண்டை வலி ஏற்பட்டது. இதன் காரணமாக பொது இடங்களில் அதிகமாக பேசாமல் தவிர்த்து வந்தார். அவருக்கு மேல் சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
நலம் விசாரிப்பு
அதன்படி கடந்த 7-ஆம் தேதி மனைவி பிரேமலதா மற்றும் மகன் சண்முகபாண்டியனுடன் அமெரிக்கா புறப்பட்டார். அங்கு இருந்தபடியே கருணாநிதியின் உடல்நிலையை கண்டு வருந்தினார். பின்னர் ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.
கண்டனம்
அதுபோல் சிலைக்கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் ஐஜி பொன் மாணிக்கவேல் - குழுவினரே விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கண்டறியவேண்டும். நேர்மையான அதிகாரிகளிடம் இருந்து,சிபிஐயிடம் வழக்கை ஒப்படைக்க கொள்கை முடிவு எடுத்திருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது கண்டனத்திற்குறியது என்றும் தெரிவித்தார்.
செம கேப்டன்
இந்நிலையில் அமெரிக்காவில் புதுபொலிவுடன் உள்ள புகைப்படங்களை டுவிட்டரில் கேப்டன் வெளியிட்டுள்ளார். அதில் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் இன்று என்று தலைப்பிட்டு படங்களை வெளியிட்டுள்ளார்.
தந்தை- மகன்
தனது மகன் சண்முகபாண்டியனை சினிமாவில் நல்ல அளவில் கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்து வருகிறார். அதன்படி அவர் 2 அல்லது 3 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிநாடு சென்றுவிட்டு திரும்பிய சண்முகபாண்டியன், தனது கையில் விஜயகாந்தின் கண்கள் வரைந்ததை அவரிடம் காண்பித்து மகிழ்ந்தார். இந்நிலையில் ஒரு இடத்தில் இருவரும் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் விஜயகாந்தும் இளைஞர் போல் காட்சியளிக்கிறார்.
நல்வாழ்த்துகள்
இந்த புகைப்படங்களால் தேமுதிகவினரும் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். கேப்டன் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று நெட்டிசன்கள் வாழ்த்தியுள்ளனர். இப்ப உள்ள அரசியல் நிலைமைய புரிஞ்சுகிட்டு சரியா காய் நகர்த்த தமிழகப்பக்கம் வாங்க கேப்டன் என்று அழைத்துள்ளனர். அதுபோல் நல்ல மனிதர் கேப்டன் மக்கள் பிரச்சனைக்கு முதல் குரல் கொடுக்கும் தலைவர் என்று அவரை பாராட்டியுள்ளனர்.