நாசாவால் ஓய்வு பெற்ற “ஐசீ” விண்கலத்திற்கு தனியார் குழும விஞ்ஞானிகள் புத்துயிர்!
நியூயார்க்: ஐசீ -3 (ISEE-3). இது அமெரிக்காவின் நாசாவால் ஓய்வு கொடுக்கப்பட்ட செயற்கைக் கோளாகும்.
ஆனால் இதை தனியார் குழுமத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் சேர்ந்து தற்போது உயிர் கொடுத்து இயக்கி வருகின்றனர்.
இந்த செயற்கைக் கோளானது சூரியனைச் சுற்றி வரும் ஒரு நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டு வருகிறது.
சந்திரனைக் கடக்கும் ஐசீ:
அதன் ஒரு பகுதியாக இந்த செயற்கைக் கோள், சந்திரனைச் கடந்து செல்லவுள்ளது.
அறிவியல் புள்ளி விவரங்கள்:
அமெரிக்க நேரப்படி ஆகஸ்ட் 10ம் தேதி முற்பகல் 11.16 மணிக்கு இந்த கடத்தல் நடக்கவுள்ளது. அந்த சமயத்தில், இதுதொடர்பான அறிவியல் புள்ளிவிவரங்களைப் பொதுமக்களும் அறியக் கொடுக்கவுள்ளனர் இந்தத் திட்ட பொறியாளர்களும், விஞ்ஞானிகளும்.
புதிய இணையதளம்:
இதுதொடர்பாக கூகுளுடன் அவர்கள் கை கோர்த்துள்ளனர். இதற்காக புதிய இணையதளத்தையும் தொடங்கியுள்ளனர். மேலும் நாசா பிரதிநிதிகளுடன் இணைந்து இந்த கடத்தலுக்கு முன்பாக சில தகவல்களையும் நேரடியாகத் தெரிவிக்கவுள்ளனர்.
விளக்கமான தகவல்கள்:
இந்த நேரடி நிகழ்ச்சியின்போது இந்த செயற்கைக் கோளின் வரலாறு, பின்னணி, அதன் எதிர்காலம் குறித்து விளக்கப்படவுள்ளது.
36 வயது செயற்கை கோள்:
இந்த செயற்கைக் கோளுக்கு வயது 36 ஆகும். தனது பயணத்தின் நிறைவாக இந்த செயற்கைக் கோள், பூமியின் சுற்றுப்பாதைக்குத் திரும்பி, சூரியக் காற்று மற்றும் கதிர்வீச்சைக் கண்காணித்து தகவல் அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்டது.
நாசா கைவிட்டது:
ஆனால் அப்படி நடைபெறவில்லை. இதையடுத்து இந்த செயற்கைக் கோளை நாசா கைவிட்டு விட்டது. ஆனால் தற்போது தனியார் குழுமம் இதை தன் பொறுப்பில் ஏற்றுள்ளது. இருப்பினும் இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த செயற்கைக் கோளுடன் தொடர்பு நீடிக்கப் போகிறது என்பது தெரியவில்லை.
17 ஆண்டுகள்:
இன்னும் 17 ஆண்டு காலத்தில் இந்த செயற்கைக் கோள் சூரியனைச் சுற்றிய பின்னர் பூமியின் புவிவட்டப் பாதைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.