கோஹ்லிக்கு ஆதரவாக இந்திய தேசியக் கொடியை ஏற்றிய பாக். ரசிகருக்கு ஜாமின்
இஸ்லாமாபாத்: விராத் கோஹ்லிக்கு ஆதரவாக இந்திய தேசியக் கொடியை ஏற்றியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த உமர் தாரஸுக்கு தற்போது பாகிஸ்தான் கோர்ட் ஜாமின் அளித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் உமர் தாரஸ். இவர் விராத் கோஹ்லி மீது மிகுந்த பற்று கொண்டவர். கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி இவர் தனது வீட்டின் மாடியில் இந்திய தேசியக் கொடியை ஏற்றியதாக சர்ச்சைக்குள்ளானார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை பிப்ரவரி 18ம் தேதி மாவட்ட நீதிபதி அனீக் அன்வர் தள்ளுபடி செய்திருந்தார். இதையடுத்து உமர் தாரஸ் சார்பில் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அசதுல்லா சிராஜ் முன்பு இன்னொரு ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி அசதுல்லா, தாரஸுக்கு ரூ. 50,000 ரொக்க ஜாமின் அளித்து உத்தரவிட்டார்.