விக்டோரியா தமிழ்ச்சங்கங்கள் அசத்தல்.. தமிழக விவசாயிகளுக்காக மெல்பர்னில் 'மொய்விருந்து'!
தமிழக விவசாயிகளுக்கான மெல்பர்னில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் மொய்விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளன.
விக்டோரியா: தமிழக விவசாயிகளுக்கான மெல்பர்னில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் மொய்விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. இந்த மொய் விருந்து நிகழ்ச்சி வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை பொய்த்துப்போனதால் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நீரின்றி விளைநிலங்கள் காய்ந்து சருகாயி போனது.
இதனால் வங்கி அதிகாரிகளுக்கு பதில் சொல்ல முடியாமலும் கடனை திரும்ப செலுத்த முடியாமலும் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர்.
ஆடுகளை வழங்கி உதவி
இந்நிலையில் தமிழக விவசாயிகள் படும் துயரத்திற்கு உதவ விக்டோரியா நகரில் உள்ள தமிழ்ச்சங்கங்கள் முன்வந்துள்ளன. இதுவரை தமிழகத்தில் உயிரிழந்த சில விவசாயிகளின் குடும்பத்திற்கு வாழ்வாதாரமாக ஆடுகளை வாங்கிக்கொடுத்து அவர்கள் உதவியுள்ளனர்.
குழந்தைகளின் கல்விச்செலவு
மேலும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குழந்தைகளின் கல்விச் செலவுக்கும் அவர்கள் உதவி வருகின்றனர். நாகை மாவட்டம் ஆழியூர் பஞ்சாயத்தில் ஐந்தரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பாசன வாய்க்காலை அவர்கள் தூர் வாரி வருகின்றனர்.
போட்டிகள் மூலம் நிதி
இதன்மூலம் 700 குடும்பங்கள் பயன்பெறும் என அவர்கள் கூறியுள்ளனர். இதற்கான நிதியை கிரிக்கெட் போட்டிகள் மற்றும் வாக்கத்தான் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தி திரட்டுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
விக்டோரியாவில் மொய்விருந்து
இந்நிலையில் மேலும் பல விவசாயிகளுக்கு உதவும் வகையில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற மொய்விருந்து நிகழ்ச்சியை நடத்த விக்டோரியா தமிழ்ச்சங்கள் முடிவு செய்துள்ளன. வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதி விக்டோரியா நகரில் இந்த மொய் விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
இந்நிகழ்ச்சியில் 2 மணி நேர பொழுது போக்கு நிகழ்ச்சியும் தென்னிந்திய ஸ்டைல் பாரம்பரிய இரவு உணவு விருந்தும் அளிக்கப்படும் என தெரிவக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 94 சதவீத டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.