கிரிமியாவை 'முழுங்கினார்' புடின்- இந்தியா, சீனாவுக்கும் நன்றி சொல்கிறார்!!
மாஸ்கோ: கிரிமியா பிரதேசத்தை ரஷியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் அந்நாட்டு அதிபர் புதினும் கிரிமிய தலைவர்களும் இன்று கையெழுத்திட்டனர். அப்போது ரஷிய நாடாளுமன்த்தில் பேசிய புதின், ரஷியாவின் பிரிக்க முடியாத ஒரு அங்கம் கிரிமியா என்றும் இந்த விவகாரத்தில் இந்தியா, சீனாவின் நிலைப்பாட்டுக்கு நன்றி என்றும் புதின் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விவகாரத்தில் உக்ரைனில் உள்நாட்டு கிளர்ச்சி ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு அதிபர் ரஷியாவில் அடைக்கலம் புகுந்தார். இதைத் தொடர்ந்து உக்ரைனின் சுயாட்சி பிரதேசமாக இருந்த கிரிமியாவை ரஷிய படைகள் ஆக்கிரமித்தன.
பின்னர் கிரிமியா, ரஷியாவுடன் இணையும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இதில் 96% பேர் கிரிமியாவை ரஷியாவுடன் இணைக்க ஒப்புதல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ரஷியா அதிகாரப்பூர்வமாக கிரிமியாவை சுதந்திர நாடாக ஏற்பதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இன்று மாஸ்கோவில் ரஷிய ஆதரவு கிரிமிய தலைவர்களுடன் கிரிமியாவை ரஷியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் அந்நாட்டு அதிபர் புதின் கையெழுத்திட்டார். அப்போது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய புதின், கிரிமியா வாழ் மக்கள் அனைவரும் ரஷியாவின் ஒரு அங்கமாகவே தங்களை கருதி வாழ்வதை நாம் நன்கு அறிவோம்.
கிரிமியாவில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பை சர்வதேச சமூகம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. கிரிமியாவில் புனிதமான பல இடங்கள் உள்ளன. ராணுவ மேலாண்மையின் சாட்சியங்கள் அங்கே இருக்கின்றன. 1954ஆம் ஆண்டு கிரிமியாவை உக்ரைனுடன் சோவியத் அரசு இணைத்த நடவடிக்கை ஏற்புடையதல்ல.. கண்டனத்துக்குரியது. திரைமறைவில் கிரிமியா தாரை வார்க்கப்பட்டுவிட்டது.
சோவியத் ரஷியாவில் இருந்து உக்ரைன் பிரிந்தது போல, செர்பியாவில் இருந்து கொசாவோ பிரிந்தது போல் உக்ரைனில் இருந்து கிரிமியா பிரிந்து ரஷியாவுடன் இணைந்துள்ளது.
கிரிமியாவுக்கு வரலாற்று ரீதியாக இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கப்பட வேண்டும். கிரிமியாவை நாங்கள் ஆக்கிரமித்துள்ளோம் என்று கூறுவது வேடிக்கையாக ஆச்சரியமானதாக இருகிறது. உக்ரைன் விவகாரத்தில் மேற்குலக நாடுகள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றன. நாங்கள் ஒன்றும் உக்ரைனை பிளவுபடுத்தவில்லை.
உக்ரைனில் வாழும் ரஷியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்கிறோம். உக்ரைனின் சேவஸ்டோபோலை நேட்டோ படைகள் பயன்படுத்தும் அச்சுறுத்தல் இருக்கிறது. அது தென் ரஷியாவுக்கு ஆபத்தானது. உக்ரைனும் ரஷியாவும் ஒரே நாடுகள்தான். ரஷிய நகரங்களின் தாய் நகரமாக திகழ்கிறது கீவ். நாம் ஒருவரையொருவர் விட்டு வாழ முடியாது. உக்ரைனில் வாழும் ரஷியர்களின் நலன்களைப் பாதுகாப்போம்.
கிரிமியா ரஷியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் திட்டவட்டமாக இருக்கிறோம். இந்த விவகாரத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் நிலைப்பாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.