உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்யா படைகள் திடீர் வாபஸ்!
மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யா படைகள் திடீரென வாபஸ் பெற அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைனின் தன்னாட்சிப்பகுதியாக இருந்து வந்த கிரிமியாவை கடந்த மார்ச் மாதம் ரஷியா தன்னோடு இணைத்துக் கொண்டது. இதையடுத்து, கிழக்கு உக்ரைனில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏப்ரல் மாதம் முதல் போர்க்கொடி உயர்த்தி ஆயுதங்களை கையில் எடுத்தனர். உக்ரைன் படையினருடன் அவர்கள் போரிட்டு, டன்ட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய இரு மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.
அவற்றை உக்ரைன் படையினரால் மீட்டெடுக்க முடிய வில்லை. இரு தரப்பினர் இடையே 5 மாத காலம் நடந்த சண்டையில் 2,600-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவுவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின. இதை ரஷ்யா மறுத்தாலும், அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்தன.
இந்த நிலையில் உக்ரைனுக்கும், ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தம் செய்வது தொடர்பாக பெலாரஸ் நாட்டின் தலைநகரான மின்ஸ்க் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் பேச்சு வார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து கிழக்கு உக்ரைனில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடந்து வந்த சண்டை முடிவுக்கு வந்தது. இதனிடையே ரஷ்யா படைகள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருந்தன. அவை போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தன. எனவே அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில் உக்ரைன் எலலையில் இருந்த ரஷ்யா படைகளை வாபஸ் பெற அதிபர் விளாடிமிர் புதின் முடிவு செய்து, அதற்கான உத்தரவினை பிறப்பித்துள்ளதாக அதிபர் மாளிகை தகவல்கள் கூறுகின்றன.