காஷ்மீர் விவகாரம் சர்வதேச பிரச்சினையாகி விட்டது.. ஆதரித்தவர்களுக்கு நன்றி.. கொக்கரிக்கும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: காஷ்மீர மக்களின் குரல்கள் இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கூட்டத்தில் கேட்கப்பட்டன என்று, ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி தெரிவித்தார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கடிதம் எழுதி கோரிய 72 மணி நேரத்திற்குள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தை கூட்டியதற்காக சீனாவுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
காஷ்மீர் மக்களின் குரல், ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் குரல் இன்று உலகின் மிக உயர்ந்த மன்றத்தில் கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் தனியாக இல்லை, அவர்களின் குரல்கள் கேட்கப்பட்டுள்ளன, அவலங்கள், கஷ்டங்கள், வேதனைகள், துன்பங்கள், ஆக்கிரமிப்பின் விளைவுகள் ஆகியவை இன்று ஐ.நா.பாதுகாப்புக் சபையில் எதிரொலித்தன.
ஜம்மு-காஷ்மீர் மக்களை பூட்டியிருக்கலாம், அவர்களின் குரல்கள் தங்கள் சொந்த வீடுகளிலும், சொந்த நிலத்திலும் ஒலிக்கவிடவில்லை. ஆனால் அந்த மக்களின் குரல்கள் இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கேட்கப்பட்டது.
இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரச்சினையாக இப்போது மாறிவிட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை கூட்டுவதைத் தடுக்கும் முயற்சி நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்தை நடத்த ஒப்புக்கொண்ட 15 உறுப்பு நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீர் தொடர்பான ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்கள் செல்லுபடியாகும் என்பதை இந்த கூட்டம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது
இது முதல் படிதான். கடைசி படி அல்ல. இந்த முயற்சி இங்கேயே முடிவடையாது. ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கும்போதுதான் அது முடிவடையும். இவ்வாறு மலீஹா லோதி தெரிவித்தார்.