இந்தோனேஷியாவை பாடாய் படுத்தும் இயற்கை சீற்றங்கள்.. நிலநடுக்கம் சுனாமியை தொடர்ந்து எரிமலை வெடிப்பு!
இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சுலேவேசி: இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் கடந்த 28ஆம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கியது.
இதில் 1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலு நகரம் சின்னாபின்னமானது.
தொடர் நிலநடுக்கங்கள்
பலியான ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உடல் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
கடும் சீற்றத்துடன்
இந்த அதிர்ச்சியில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில் சுலேவேசி தீவில் எரிமலை ஒன்று வெடித்து சிதற தொடங்கியுள்ளது. சுலவேசி தீவில் உள்ள மவுண்ட் சோபூடன் எரிமலை இன்று காலை வெடித்து சிதறி கடும் சீற்றத்துடன் சாம்பலைக் கக்கத் தொடங்கி உள்ளது.
நெருப்புக்குழம்பு
இதனால் எந்த நேரத்திலும் நெருப்புக் குழம்பு வெளிப்படும் அபாயம் உள்ளது. எரிமலையில் இருந்து வெளிவரும் புகையானது வானில் 6000 மீட்டர் உயரத்திற்கு பரவி உள்ளது. அப்பகுதியில் விமானங்களை இயக்குவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முகமூடி அணிந்துகொள்ள
எரிமலை அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், சாம்பல் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முகமூடிகள் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.
120 எரிமலைகள்
பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ளது இந்தோனேசியா. இங்கு சிறியதும் பெரியதுமான 120க்கும் மேற்பட்ட எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.