எதிர்ப்பை மீறி கிரிமியாவில் வாக்கெடுப்பு: ரஷ்யாவுடன் சேர்கிறது?
சிம்பர்போல்: கிரிமியாவை ரஷ்யாவுடன் சேர்ப்பதா வேண்டாமா என்பது குறித்த வாக்கெடுப்பு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.
பொருளாதார பிரச்சனைகளை சீர்படுத்த ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைன் இணையவிருந்த திட்டத்திற்கு அந்நாட்டு அதிபர் விக்டர் யனுகோவிச் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு போராட்டம் வெடித்தது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார்.
இந்நிலையில் உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியா ரஷ்யாவுடன் இணைய முடிவு செய்தது. இது குறித்த தீர்மானம் கிரிமியா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பது தொடர்பான பொது வாக்கெடுப்பு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.
கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கவே மக்கள் விரும்புவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த பொது வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்று ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பு உக்ரைன் நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும் கிரிமியாவில் வாக்கெடுப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த வாக்கெடுப்பின் முடிவை ஏற்கக் கூடாது என்று ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ உரிமை மூலம் எதிர்த்தது.