இந்திய கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கு ரூ.320 கொடுத்து காரியம் சாதித்த வால்-மார்ட்! விசாரணையில் அதிர்ச்சி
வாஷிங்டன்: இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வால்-மார்ட் நிறுவனம், இங்குள்ள அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்துள்ளது என்று அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான "தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வால்-மார்ட் பன்னாட்டு சில்லறை வர்த்தக நிறுவனம், இந்தியாவில், பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் சேர்ந்து சில்லறை விற்பனை நிலையங்களை தொடங்குவதற்கான முயற்சியில் 2013ம் ஆண்டு, காங்கிரஸ் அரசு மத்தியில் இருந்தபோது ஈடுபட்டது.
சில்லரை வணிகம்
பின்னர், அந்தத் திட்டத்தை கைவிட்டு தனியாக விற்பனை நிலையங்களைத் தொடங்குவதென வால்-மார்ட் முடிவு செய்தது. இந்நிலையில், மெக்சிகோ நாட்டில் இருக்கும் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்களில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க அரசு விசாரணை நடத்தியது.
விசாரணையில் அம்பலம்
இந்த விசாரணையின்போது, இந்தியாவில் வர்த்தக நடவடிக்கைகளுக்காக வால்-மார்ட் நிறுவனம் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததும் தெரியவந்தது. அந்த விசாரணை அறிக்கையை மேற்கோள்காட்டி, 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சுங்கத்துறை லஞ்சம்
இந்தியாவின் கஸ்டம்ஸ் அதிகாரிகள் மூலமாக தனது பொருள்களைக் கொண்டு செல்வதற்கு, அடிமட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கு சிறு சிறு தொகைகளாக லஞ்சம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
ரூ.300 முதல் 12 ஆயிரம்வரை
சில அதிகாரிக்கு அதிகளவாக 200 அமெரிக்க டாலரும் (தோராயமாக ரூ.12,000), சில அதிகாரிகளுக்கு வெறும் 5 டாலரும் (ரூ.320) லஞ்சமாக தரப்பட்டுள்ளது. இந்த பணத்தை வாங்கிக்கொண்டு இந்திய கஸ்டம்ஸ் துறையிலுள்ள அதிகாரிகள், வால்-மார்ட் நிறுவனத்துக்கு ஒத்துழைத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்க முடியாது
லஞ்சமாக கொடுத்த தொகைகள் அனைத்தையும் மொத்தமாக சேர்த்தால், பல கோடி ரூபாயை தாண்டுகிறது. இருப்பினும், வால்-மார்ட் நிறுவனம், இந்த லஞ்சத்தால் இதுவரை லாபம் எதையும் ஈட்ட ஆரம்பிக்கவில்லை. எனவே அமெரிக்காவின் வெளிநாட்டு ஊழல் நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ், வால்-மார்ட்டுக்கு அபராதம் விதிக்க முடியாது. லாபம் பெற்றது தெரிந்தால் மட்டுமே அபராதம் விதிக்க முடியும்.