வாட்ச், வைரத் தோடைத் திருடியதாக மாஜி காதலி மீது மாரடோனா புகார்.. கைதாகிறார்!
துபாய்: அர்ஜென்டைனா கால்பந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் டியகோ மாரடோனா தனது மாஜி காதலி மீது திருட்டுப் புகார் கூறியுள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்ய துபாய் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாஜி காதலி ரோசியோ ஒலிவாவுக்கு கோர்ட் மூலம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
53 வயதான மாரடோனாவின் முன்னாள் காதலிதான் இந்த 22 வயதான ஒலிவா என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்களுக்குள் தொடர்பு ஏதும் இல்லை.
எல்லாமே சர்ச்சைதான்
மாரடோனாவின் வாழ்க்கையில் எல்லாமே சர்ச்சைதான். போதை மருந்துப் பழக்கம், உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் கையால் கோல் போட்டது. முரட்டுத்தனமாக நடந்து கொள்வது, அடிப்பது என்று அவர் சர்ச்சையில் சிக்காத நாளே இல்லை.
மாஜி காதலி மீது திடீர் புகார்
இந்த நிலையில் கடந்த மாதம் துபாய்க்கு வந்திருந்தார் மாரடோனா. அப்போது அவர் ஒலிவாவுடன் தங்கியிருந்துள்ளார். இந்தப் பின்னணியில் ஒலிவா மீது புதுப் புகாரை துபாய் போலீஸில் கொடுத்துள்ளார் மாரடோனா.
கடிகாரத்தைத் திருடியதாக
தனது கைக்கடிகாரங்கள், வைரத் தோடுகளை ஒலிவா திருடியதாக புகாரில் கூறியுள்ளார் மாரடோனா.
வாரண்ட்
இதையடுத்து ஒலிவா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்டர்போல் உதவியுடன்
ஒலிவா தற்போது துபாயில் இல்லை. எனவே அவரைக் கைது செய்ய இன்டர்போல் போலீஸாரின் உதவியையும் துபாய் போலீஸார் நாடவுள்ளனராம்.
சும்மா டூப் அடிக்கிறார் மாரடோனா
தற்போது அர்ஜென்டைனாவில் இருக்கும் ஒலிவா, மாரடோனா தன் மீது கொடுத்துள்ள புகார்களை மறுத்துள்ளார். அனைத்தும் பொய்ப் புகார் என்றும் அவர் கூறியுள்ளார்.
போன மாதம் சேர முயற்சி
கடந்த மாதம்தான் இருவரையும் சேர்த்து ரியோ டிஜெனீரோவில் பலரும் பார்த்தனர். மீண்டும் சேர்ந்து காதலிக்க இருவரும் முயற்சித்ததாகவும், ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஒலிவா மீது திருட்டுப் புகாரைக் கொடுத்துள்ளார் மாரடோனா.