ஏசு கிறிஸ்துவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்ததாக கூறும் புத்தகத்தால் சர்ச்சை
வாஷிங்டன்: ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்றும், மனைவி மற்றும் இரு குழந்தைகள் அவருக்கு இருந்ததாகவும் கூறி எழுதப்பட்ட புத்தகம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
யார்க் பல்கலைக்கழக (கனடா) பேராசிரியர் பார்ரி வில்சன் மற்றும் ஆவண தொகுப்பாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஆகியோர் இணைந்து எழுதியுள்ள புத்தகம் "The Lost Gospel". இந்த புத்தகம் உலகம் எங்கும் நாளை, புதன்கிழமை முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
பழமையான பிரிட்டீஷ் நூலகத்தில் அராமெய்க் மொழியில் இருந்த ஒரு ஆவணத்தை மொழி பெயர்த்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதில் கிறிஸ்தவர்களால் கடவுளாக வணங்கப்படும் ஏசு கிறிஸ்துவிற்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி பெயர் மேரி மக்டாலேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கிறிஸ்தவர்கள் மத்தியில் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது இந்த புத்தகம். ஆராமெய்க் மொழியில் தங்களிடமிருந்த அந்த புத்தகத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அது ஆய்வாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது என்று கூறி பிரிட்டீஷ் நூலகம் இந்த விவகாரத்தில் இருந்து தன்னை தள்ளி நிறுத்திக்கொண்டுள்ளது.
"வாடிகன் (கத்தோலிக்க கிறிஸ்த தலைமையிடம்) எதற்காக பயந்துகொண்டிருந்ததோ, டாவின்சி கோட் படைப்பாளி டான் பிரவுனுக்கு எந்த சந்தேகம் வந்ததோ, அது இப்போது உண்மையாகிவிட்டது" என்பதே இந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் உள்ள வரிகளாகும். ஏனெனில் டான் பிரவுன் தனது டாவின்சி கோட் புத்தகத்திலும், ஏசு கிறிஸ்து திருமணமானவர் என்று தெரிவித்திருந்தார். அது உண்மையாகிவிட்டதாக 'தி லாஸ்ட் கோஸ்பல்' புத்தகத்தை எழுதியுள்ளோரும் குறிப்பிடுகின்றனர்.
எழுத்தாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஏற்கனவே, ஜெருசலத்தில் ஆய்வு நடத்தி, ஏசு கிறிஸ்து மறைந்த பிறகு கட்டிய கல்லறை அங்கு உள்ளதாக தெரிவித்திருந்தார். ஆனால் இதை வேறு பல ஆய்வாளர்கள், பைபிள் ஆய்வாளர்கள் மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.