நியூசிலாந்தில் அதிசயம்: இரவை பகல் போன்று வெளிச்சமாக்கிய விண்கல்
வெல்லிங்டன்: நியூசிலாந்தின் வடக்குப்பதியில் புதன்கிழமை இரவு விண்கல் பிரகாசமாக தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள தவ்ரங்கா நகரில் புதன்கிழமை இரவு மக்கள் அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தனர். திடீர் என்று இரவு நேர இருள் நீங்கி பகல் போன்று வானில் வெளிச்சம் ஏற்பட்டது. இந்த அதிசயத்தை பார்த்த மக்கள் அப்படியே அசந்து நின்றனர்.
அதில் சிலர் வானில் நடந்த அதிசயத்தை செல்போனில் வீடியோ எடுத்தனர். ஷெர்போர்ன் என்பவர் தான் எடுத்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
நான் ஜிம்முக்கு செல்லும் வழியில் விண்கல் திடீர் என்று வந்தது. முதலில் அது மின்னல் என்று நினைத்தேன். நியூசிலாந்தில் இது நடந்ததை பார்த்தது கூலாக உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எரிபந்து விண்கற்கள் ஒன்றும் அதிசயமானவை அல்ல. அவை வானில் தென்பட்ட வேகத்தில் மறைந்துவிடுவதால் மக்கள் அதை பார்ப்பது அரிது என்று நியூசிலாந்தில் உள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விண்வெளி ஆய்வு நிபுணரான மாரக் குகுலா கூறுகையில்,
சிசிடிவி மற்றும் வெப்கேமராக்கள் உள்ளதால் எரிபந்து விண்கற்களை பார்க்க முடிகிறது. அது வானில் தெரிந்த நேரத்தில் கடற்கரையில் யாரும் இல்லை. ஆண்டுதோறும் 40 ஆயிரம் டன் பொருட்கள் வானில் இருந்து பூமியில் விழுகின்றன. ஆனால் அவை பூமியில் விழத் தொடங்கும்போது எரிந்து சாம்பலாகிவிடும் என்றார்.