இரட்டை கோபுர தாக்குதலில் எங்களுக்கு தொடர்பா? அதிர்ச்சி அளிக்கும் வழக்கில் சவுதி வாதம்!
இரட்டை கோபுர தாக்குதலில் உதவியதாக சவுதி நாட்டின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.
நியூயார்க்: 2001 செப்டம்பர் மாதம் 11ம் தேதி இரட்டை கோபுரம் அல்கொய்தா தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. அமெரிக்காவில் நடந்த மிக மோசமான தீவிரவாத தாக்குதல் ஆகும் இது.
ஆனால் அந்த தாக்குதல் நடந்ததில் இருந்து நிறைய கேள்விகளும், குழப்பங்களும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இது அமெரிக்காவே திட்டமிட்டு நடத்திய தாக்குதல் என்று அமெரிக்கர்களே எழுதினார்கள்.
சிலர் இதெல்லாம் அரசியல் திட்டம் என்றார்கள். அப்படித்தான் இந்த பிரச்சனையில் சவுதிக்கும் தொடர்பு இருக்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
பண உதவி
இரட்டை கோபுர தாக்குதலுக்கு சவுதி உதவியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகளுக்கு சவுதி பண உதவி அளித்து இருக்கிறது. அங்கு இருக்கும் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த உதவி சென்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சட்டம்
இந்த குற்றச்சாட்டுகள் சரியாக ஒபாமா ஆட்சி காலத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து அந்நிய நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்திற்கு 'ஜாஸ்டா' என்று பெயர் வைக்கப்பட்டது.
பிரச்சனை
தற்போது சவுதிக்கு எதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்பட இருக்கிறது. அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள், அமெரிக்க உளவுப்படை, ராணுவம் என அனைவரும் சவுதி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதன்படி தாராளமாக சவுதியை இந்த வழக்கின் கீழ் விசாரிக்க முடியும். இது இருநாட்டு பிரச்சனையாக மாறும்.
பதிலடி
தற்போது இதற்கு சவுதி தக்க பதிலடி கொடுத்து இருக்கிறது. நாங்கள்தான் உதவினோம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளனர். இதற்கு எதிராக சிறிய ஆதாரம் கூட கொடுக்கப்படவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். நீதிமன்றத்தில் பேசிய சவுதி தரப்பு அந்த சட்டத்தை தூக்கி எறியுங்கள் என்று கோபமாக பேசியுள்ளனர்.