பிடனின் வெற்றியை அங்கீகரிக்க முடியாது.. ஒரே போடாக போட்ட ரஷ்யா.. புடினின் "திடீர்" பேச்சால் பரபரப்பு!
மாஸ்கோ: அமெரிக்க தேர்தலில் பிடன் வெற்றிபெற்றுள்ள நிலையில் அவரை புதிய அதிபராக அங்கீகரிக்க முடியாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றிபெற்றுள்ளார். நினைத்து பார்க்க முடியாத மிகப்பெரிய தோல்வியை குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பிடன் 290 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார்.அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ள டிரம்ப், தனது தோல்வியை ஏற்க மறுத்து தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறார். டிரம்ப் 232 எலக்ட்ரல் வாக்குகளை பெற்று, தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.
வாழ்த்து
இந்த நிலையில் அதிபர் தேர்தலில் பிடனின் வெற்றியை ஏற்றுக்கொண்டு உலக நாடுகள் பல வாழ்த்தி உள்ளது. கனடா, ஆஸ்திரேலியா, அரபு நாடுகள் உள்ளிட்ட அமெரிக்காவிற்கு நெருக்கமான நாடுகள் எல்லாம் பிடனுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டது. பிடனின் தேர்தல் வெற்றியை பெரும்பாலான நாடுகள் அங்கீகரித்துவிட்டது.
எப்படி
அதேபோல் டிரம்பிற்கு நெருக்கமாக இருந்த இந்திய பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போன்ற தலைவர்களும் கூட பிடனுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டனர். சீனாவும் பிடனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆனால் ரஷ்யா மட்டும் இன்னும் பிடனுக்கு வாழ்த்து சொல்லவில்லை.
வாழ்த்து சொல்லவில்லை
முழுமையான தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியான பின்தான் வாழ்த்து சொல்ல முடியும் என்று ரஷ்யா அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஷ்ய அதிபர் புடின் அளித்த பேட்டியில், பிடனை புதிய அதிபராக அங்கீகரிக்க முடியாது. அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வென்றாலும் கவலை இல்லை.
ஆனால் என்ன
ஆனால் ஜோ பிடனின் வெற்றியை ரஷ்யா இப்போது ஏற்காது. அமெரிக்க மக்களின் முழுமையான அங்கீகாரத்தை பெறும் நபருடன் நாங்கள் நெருக்கமாக தயார். ஆனால் இன்னும் முழுமையாக தேர்தல் முடிவுகள் வரவில்லை. இந்த தேர்தல் முடிவை இன்னும் சில மக்களும், எதிர்க்கட்சிகளும் ஏற்கவில்லை.
வெற்றி முக்கியம்
சட்ட ரீதியாகவும், அதிகாரபூர்வ ரீதியாகவும் வெற்றியை முழுமையாக அறிவிக்கட்டும், பிறகு பார்க்கலாம். ரஷ்யா - அமெரிக்கா உறவில் இனியும் பாதிக்க எதுவும் இல்லை. எல்லாம் மொத்தமாக முன்பே பாதித்துவிட்டது, என்று குறிப்பிட்டுள்ளார். 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற ரஷ்யாவும் புடினும்தான் காரணம் என்று புகார் வைக்கப்பட்டு இருந்தது.
சிஐஏ
இது தொடர்பாக சிஐஏ அமைப்பும் கூட விசாரணை நடத்தியது.அதேபோல் 2020 தேர்தலிலும் ரஷ்யா அமெரிக்க தேர்தலில் முறைகேடு செய்ய முயன்றது, பிடனை வலிமை இல்லாதவர் போல காட்ட நினைத்தது என்று செய்திகள் வந்தது. இந்த நிலையில்தான் தற்போது பிடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று புடின் தெரிவித்துள்ளார்.