ஜம்மு காஷ்மீர் விவகாரம்...ஐநா கவுன்சில்...நோ சொன்ன அமெரிக்கா...மூக்குடைபட்ட சீனா!!
ஐநா: இந்திய உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்க சீனாவை அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் விஷயத்தை மீண்டும் நேற்று ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் எழுப்புவதற்கு சீனா முயற்சித்தது. ஆனால், உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை.
''ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான விஷயங்களை மீண்டும் மீண்டும் எழுப்புவதற்கு சீனா முயற்சித்து வருகிறது. இதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுபோன்று சீனா நடந்து கொள்வது முதன் முறையல்ல. இந்திய உள்நாட்டு விவகாரத்தில் சீனா தலையிடுவதை உறுதியாக எதிர்க்கிறோம்'' என்று இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
சீனா ஒவ்வொரு முறையும் ஜம்மு காஷ்மீ விஷயத்தை ஐநா பாதுகாப்புக் கவுன்சிலுக்கு எடுத்துச் சென்று இந்திய உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்க முயற்சிக்கிறது. இதற்கு இந்தியாவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போதும் அதுபோன்ற செயலில் சீனா ஈடுபட்டு, மூக்கை உடைத்துக் கொண்டுள்ளது.
ஐநா பாதுகாப்புக் கவுசிலில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சீனா நேற்று எடுத்தது. ஆனால், அதற்கு அங்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதன் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
இதுகுறித்து ஐநாவுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி கூறுகையில், ''ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான விவகாரமாக இருந்தது. சிம்லா ஒப்பந்தத்தின்படி தீர்வு காணப்பட்டது என்று ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் இருக்கும் உறுப்பின நாடுகளுக்கும் தெரியும். இந்த விஷயத்தை மீண்டும் சர்வதேச அளவில் எடுத்துச் செல்ல முயற்சித்த பாகிஸ்தானின் முயற்சி தோல்வி அடைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் விஷயம் இருநாடுகளுக்கு இடையிலானது. இங்கு அதற்காக பேசுவதற்கு நேரம் ஒதுக்க முடியாது என்று உறுப்பின நாடுகள் தெரிவித்து விட்டன'' என்றார்.
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் ஜி.சி முர்மு- புதிய ஆளுநரானார் மனோஜ் சின்ஹா
ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு, சிறப்பு அஸ்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த நிலையில், நேற்று ஐநாவில் இந்த விஷயத்தை எழுப்ப சீனா முயற்சித்தது. ஆனால், இதற்கு நேரம் இல்லை என்றும், இரண்டு நாடுகளுக்கு இடையிலான விவாகாரம் என்று கூறி முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத சீனாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த விஷயத்தை சீனா கையில் எடுக்கவுமே, முதலில் அமெரிக்கா முந்திக் கொண்டு, ''இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான விஷயம். ஜம்மு காஷ்மீர் விஷயம் பாதுகாப்புக் கவுன்சில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடிய ஒன்று இல்லை'' என்று கூறியது. இதையே மற்ற உறுப்பு நாடுகளும் கூறின. இதனால், ஜம்மு காஷ்மீர் விஷயத்தை உலக அரங்கில் மீண்டும் எழுப்ப வேண்டும் என்று காத்திருந்த சீனாவுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு சட்டம் 370 ரத்து செய்யப்பட்டது உள்நாட்டு விவகாரம். இதை பாகிஸ்தான் உலக அரங்கில் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று ஏற்கனவே இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதமும் இந்த விஷயத்தை ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் எழுப்புவதற்கு சீனா முயற்சித்து தோல்வியடைந்தது.