பாகிஸ்தான் - ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரை சீர்குலைக்க முயற்சித்த 'ரா' : பாக். திடுக் புகார்
கராச்சி: பாகிஸ்தானில் ஜிம்பாப்வே அணி கிரிக்கெட் விளையாடுவதைத் தடுக்க இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா' முயற்சித்ததாக பாகிஸ்தான் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இருவர் கொல்லப்பட்டனர். உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எந்த வெளிநாட்டு அணியும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜிம்பாப்வே அணி அண்மையில் அந்நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இந்தப் போட்டிகளுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனிடையே பஞ்சாப் மாகாண சட்டசபையில் பேசிய அதன் உள்துறை அமைச்சர் சுஜா கன்சடா, ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானுக்கு வந்த போது அதை தடுக்க இந்தியாவின் 'ரா' அமைப்பு முயற்சித்தது. அந்த அணி வீரர்கள் துபாய் வந்திறங்கிய போது, பாகிஸ்தானுக்குள் நீங்கள் போனால் உயிரோடு திரும்ப முடியாது என தகவல் ஒன்று போனது.
இந்தத் தகவல் யாரிடம் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது என ஆராய்ந்து பார்த்ததில் அது 'ரா' அதிகாரி ஒருவர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது என்று கூறியுள்ளார்.
ஜிம்பாப்வேவுக்கு செல்ல இருந்த இந்திய அணியின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் பாகிஸ்தான் மாகாண அமைச்சரின் இந்த பேச்சு புதிய சர்ச்சையை எழுப்பக் கூடும் என தெரிகிறது.