போரை நாங்கள் விரும்பவில்லை.. இந்தியா தாக்கினால் பலமாக திரும்ப தாக்குவோம்.. பாக்.ராணுவ மேஜர் பகீர்
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் போருக்கு செல்ல நாங்கள் விரும்பவில்லை, ஆனால் இந்தியா தாக்கினால் அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத அளவிற்கு திருப்பி கொடுப்போம் என்று அந்நாட்டு ராணுவ மேஜர் ஆசிப் காபூர் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி அவ்வபோது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 14 ம் தேதி நிகழ்த்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பிறகு போர் வரக்கூடும் என்ற பயத்தில் பாகிஸ்தான் படைகள் எல்லையில் குவிக்கப்பட்டன. ஆனால், இந்திய படைகள் எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை.
மாறாக, தீவிரவாதிகளை களையெடுக்கும் வேலைகளில் களமிறங்கியது இந்திய ராணுவம். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை விடாமல் துரத்தி சுட்டுக்கொன்றனர். இன்று காலையில் பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் பகுதியில் உள்ள வார்போரா என்ற இடத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதியை சுட்டுக்கொண்ட பாதுகாப்பு படையினர் அவனிடம் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இதே போல், உத்திரபிரதேசத்தில் பதுங்கி இருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீரி இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், பாகிஸ்தான் மேஜர் ஜெனரல் ஆசிப் காபூர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், பாகிஸ்தான் போருக்கு தயாராகி வருவதாக இந்தியாவில் கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் இந்த் போரை தொடங்குவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
போரை ஆரம்பிக்க ஆசைப்படுவது இந்தியாதான், பாகிஸ்தான் கிடையாது. இந்தியாதான் பாகிஸ்தானுக்கு போர் அச்சுறுத்தல்களை தருகிறது. போரை நாங்கள் விரும்பவில்லனு, ஆனால் இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி தருவோம்.
இந்தியா கொஞ்சமும் எதிர்பார்க்காத பதில் தாக்குதலை நாங்கள் கொடுப்போம். புல்வாமா தாக்குதலால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. எங்கள் மீது இந்தியா தேவையில்லாமல் பழி போடுகிறது, என்று அந்நாட்டு ராணுவ மேஜர் ஆசிப் காபூர் தெரிவித்துள்ளார்.