பின் லேடன் எங்கள் ஹீரோ, மோடிக்கு உளவியல் பிரச்சனை உள்ளது: முஷாரப்
இஸ்லாமாபாத்: காஷ்மீர் பள்ளத்தாக்கில் தீவிரவாதத்தை பரப்ப முஜாஹிதீன்களுக்கு பயிற்சி அளித்ததாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி தொலைக்காட்சி சேனலான துனியா டிவிக்கு அந்நாட்டு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது,
காஷ்மீரில் தாக்குதல் நடத்த லஷ்கர்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்தது. ஆப்கானிஸ்தானின் சோவியத்துகளை எதிர்கொள்ள நாம் தாலிபான், அய்மான் அல் ஜவாஹிரி மற்றும் ஜலாலுத்தீன் ஹக்கானி ஆகியோருக்கு பயிற்சி அளித்தோம்.
காஷ்மீர்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை பரப்ப முஜாஹிதீன்களுக்கு பயிற்சி அளித்தோம். அவர்கள் அடக்கி வைக்கப்படுவதை எதிர்த்து நாம் போராட வேண்டும். லஷ்கர் இ தொய்பாவுக்கு பாகிஸ்தான் நிதி அளித்தது.
சயீத்
ஹபீஸ் சயீத் நம் ஹீரோ. மேலும் ஜிஹாதில் பங்கேற்க எல்லையைத் தாண்டி இந்த பாக்கம் வந்த காஷ்மீரிகளும் நம் ஹீரோக்கள். ஹக்கானி, ஒசாமா பின் லேடன் ஆகியோரும் நம் ஹீரோக்கள்.
மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உளவியல் பிரச்சனை உள்ளது. அவர் தனக்கு 10 வயது இருக்கையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்ததாக கேள்விப்பட்டேன். அப்படி என்றால் சிறுவயதில் இருந்தே அவர் மனதில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் நன்கு பதிந்திருக்கும்.
ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் இந்துக்களின் ஆதிக்கத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். அது முஸ்லீம்கள் மீது ஆதிக்கத்தை காட்ட முயற்சி செய்கிறது. சிறுபான்மையினரை ஆள்வதை நம்புகிறவர் மோடி என்றார் முஷாரப்.