நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு... நீங்க தான் கொஞ்சம் உதவனும்.. இந்தியாவிடம் தடுப்பூசி கேட்கும் மெக்சிகோ
மெக்சிகோ: தங்கள் நாட்டில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளதால் இந்தியாவிடம் இருந்து 8.70 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெறவுள்ளதாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் அறிவித்துள்ளார்.
கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மெக்சிகோ உள்ளது. கொரோனாவால் அதிக மக்களை இழந்தவர்கள் பட்டியலில் அமெரிக்கா பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் மெக்சிகோ உள்ளது.
கொரோனா பாதிப்பைக் குறைக்க ஃபைசர், ஆக்ஸ்போர்ட், ஸ்புட்னிக் வி உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உலகளவில் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளதால் மெக்சிகோவில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி
லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கு தேவையான ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி உற்பத்தி செய்து, விநியோகிக்கும் பொறுப்பு மெக்சிகோ மற்றும் அர்ஜெண்டினா நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், நிலைமை மோசமடைந்துள்ளதால், உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்வதுடன், வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவிடம் இருந்து 8.70 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியை பெறவுள்ளதாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் அறிவித்துள்ளார். ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியையே கோவிஷீல்ட் என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
ஃபைசர் தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக மெக்சிகோ, தன்னால் முடிந்தவரை தடுப்பூசி கொள்முதலை வேகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்திடமும் தடுப்பூசி ஆர்டரை அளிதிருந்தது. ஆனால், தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பிப்ரவரி 10ஆம் தேதி மெக்சி நாட்டிற்கு 15 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா மற்றும் சீன தடுப்பூசி
அதேபோல பிப்ரவரி மாதம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் 8.70 டோஸ்களையும் மெக்சிகோ பெறவுள்ளதாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் தெரிவித்தார். இதுதவிர உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் சுமார் 18 லட்சம் தடுப்பூசி டோஸ்களை அடுத்த மாதம் மெக்சிகோ பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், சீனாவின் தடுப்பூசிகளையும் விரைவில் மெக்சிகோ பெறும் எனறு அவர் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு
சுமார் 13 கோடி மக்கள் தொகையை கொண்ட மெக்சிகோ, தற்போது வரை தனது நாட்டிலுள்ள சுமார் 20% பேருக்கு தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளது. இதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அந்நாட்டின அதிபர் தெரிவித்துள்ளது. மெக்சிகோ நாட்டில் தற்போது வரை 18.41 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 1.56 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.