அது யாருப்பா முதுகுல... மரங்கொத்தியின் முதுகில் பயணித்த மரநாய்... கேமராவில் சிக்கியது!
லண்டன்: மரங்கொத்தி பறவையின் பின்புறத்தில் மரநாய் ஒன்று சவாரி செய்ததை இங்கிலாந்தை சேர்ந்த புகைப்படக் கலைஞர் மார்டின் லீ-மே புகைப்படமாக எடுத்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த அமெச்சூர் புகைப்படக் கலைஞர் மார்டின் லீ-மே.இவர் கடந்த திங்களன்று எஸ்செக்ஸில் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, மரங்கொத்தியின் மீது மரநாய் ஒன்று பயணம் செய்யும் காட்சியைக் கண்டுள்ளார்.
உடனடியாக, மார்டின் தனது கேமராவால் அதைப் புகைப்படமாகப் பதிவு செய்து விட்டார்.
இப்புகைப்படம் தொடர்பாக மார்டின் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘நானும், என் மனைவியும் நடந்து சென்றபோது ஏதோ வினோதமான சத்தம் கேட்டது. நாங்கள் மோசமாக எதோ நடக்கபோகிறது என்று பயந்துவிட்டோம். பின்னர் இது மரங்கொத்தி கத்தும் சத்தம் என்று உணர்ந்து கொண்டோம், மரங்கொத்தி ஒன்று தனது முதுகில் இருக்கும் சிறிய மரநாயை இழே இறங்க செய்ய போராடியது எங்களுக்கு தெரிந்தது.
மரங்கொத்தி தரையில் இறங்கியதும் மரநாயின் கவனத்தை நாங்கள் திசைதிருப்பிவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். உடனடியாக மரநாய், மரங்கொத்தியின் முதுகில் இருந்து வேகமாக இறங்கி புதருக்குள் ஓடிவிட்டது' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘எல்லோரும் நான் எடுத்த இந்த புகைப்படங்களை பார்க்கிறார்கள் என்பதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு பெரிதும் ஆச்சரியமளிக்கிறது' என்கிறார்.
இதுதொடர்பாக வனவிலங்கு நிபுணர் லூசி குக் பேசுகையில், ‘மரநாய்கள் பயமில்லாதவை. பெண் மர நாய்களின் எடையானது மார்ஸ் பாரைவிட (சாக்லேட்) சிறியது. ஆனால் ஒரு சிங்கம் போன்று வலிமையானது என்றார் அவர்.
மற்ற விலங்குகளுடன் மரங்கொத்தியை ஒப்பிட்டுள்ள அவர், அதனால் அதனுடையை எடையைவிட கூடுதல் எடையுடன் பறக்க முடியும்' எனக் கூறியுள்ளார்.