20 லட்சம் பேருக்கு கொரோனா இருந்தால் என்ன.. அணு ஆயுத சோதனைக்கு ரெடியாகும் வடகொரியா.. பரபர பின்னணி
பியோங்யாங்: வடகொரியாவில் ஒருபுறம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் ஆயுத சோதனைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீனாவில் கடந்த 2019இல் பரவ தொடங்க கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஒரு வழி செய்துவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு மிக மோசமாக உள்ளது.
கடந்த சில மாதங்களாக உலகெங்கும் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, இப்போது மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது மக்களிடையே கொரோனா அடுத்த அலை குறித்த பீதியை ஏற்படுத்தி உள்ளது.
பேரழிவு.. சுனாமியாய் பரவும் கொரோனா..! கர்வத்தால் கவிழ்ந்ததா வட கொரியா? கிம் என்ன சொன்னார் தெரியுமா?
வடகொரியா
அதிலும் குறிப்பாக வடகொரியா நாட்டை கொரோனா வைரஸ் இப்போது பாடாய் படுத்துகிறது. கொரோனா பரவல் தொடங்கிய உடனேயே வடகொரியா தனது எல்லைகளை மூடிக்கொண்டது. இதனால், இரு ஆண்டுகளுக்கு மேலாக அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு, அங்குப் பலருக்குத் தொடர்ச்சியாக வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ்
வட கொரியா நேற்று மட்டும் 2.62 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் வடகொரியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டி உள்ளது. கொரோனா பாதிப்பு அங்குப் பரவ தொடங்கி சில நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், 20 லட்சம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மோசமாக இருக்கலாம்
கொரோனா பாதிப்பு ஒருபுறம் என்றால் அதன் பலவீனமான பொருளாதாரம் மேலும் மோசமாவதைத் தடுக்கவும் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், அதிகாரப்பூர்வ தகவலை விட உண்மையான வைரஸ் பாதிப்பு அதை விட மோசமாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஏனெனில் அங்கு போதிய அளவு கொரோனா பரிசோதனை செய்யக் கட்டமைப்புகள் இல்லை. அதேபோல அங்கு போதிய சுகாதார கட்டமைப்பும் இல்லை.
உயிரிழப்பு
மேலும், அரசியல் ரீதியாக அழுத்தத்தைக் குறைக்க வட கொரியா கொரோனா பாதிப்பு குறைத்துக் காட்டலாம் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. தற்போது வரை அங்கு 63 பேர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது குறைவாக உள்ளதால் வல்லுநர்கள் இந்த தகவலை சந்தேகிக்கின்றனர். ஏப்ரல் கடைசி வாரம் முதல் சுமார் 19.8 லட்சம் பேருக்கு அங்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கும் என நம்பப்படுகிறது. மேலும், சுமார் 7,40,160 பேர் தனிமையில் உள்ளனர்.
ஆயுத சோதனை
ஒரு புறம் வட கொரியாவின் அதிபயங்கர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கொரோனா பாதிப்பு வடகொரிய அதிபர் கிம்மின் வேகத்தைக் குறைக்கும் என்று வல்லுநர்கள் நம்பவில்லை. அவர் திட்டமிட்டபடி ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து மேற்கொள்வார் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
அணு ஆயுதம்
இது தொடர்பாகத் தென் கொரியாவின் உளவு நிறுவனம் கூறுகையில், "வட கொரியா அணு ஆயுத சோதனையை நடத்துவதற்கான அனைத்து தயாரிப்புகளையும் முடித்துவிட்டது. வடகொரியா இப்படிச் செய்வது இது 7ஆவது முறையாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பைடன் இன்னும் சில நாட்களில் தென்கொரியா மற்றும் ஜப்பான் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அப்போது வட கொரியா அணு ஆயுத சோதனையை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.