வெல்கம் டூ நியூயார்க்.. அமெரிக்காவில் முதல்வர் பழனிச்சாமிக்கு அமைச்சர்கள் அளித்த உற்சாக வரவேற்பு
நியூயார்க்: லண்டனில் இருந்து நியூயார்க் சென்றடைந்த முதல்வர் பழனிசாமிக்கு அமைச்சர்கள் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு முதலீடுகளை திரட்டும் நோக்கிலும், வெளிநாடுகளில் செயல்படுத்தும் தொழில்நுட்பங்களை அறிந்து வந்து அதை தமிழகத்தில் செயல்படுத்தும் நோக்கிலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த ஆகஸ்டு 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து லண்டனில் இருந்து புறப்பட்டு, இன்று அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சென்றடைந்தார். அங்கு முதல்வரை அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயக்குமார் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
முதல்வர் பழனிச்சாமி நியூயார்க் நகரில் இருந்து பபல்லோ நகருக்கு இன்று செல்கிறார். சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவிற்கு தேவைப்படும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதற்காக அங்கு செல்கிறார்.. அவருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ராஜேந்திரபாலாஜி, ஆர்.பி.உதயக்குமார், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அந்த துறையின் அதிகாரிகளும் செல்கின்றனர்.
நாளை நியூயார்க் நகரில் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்களிடம் முதல்வர் பழனிசாமி கலந்துரையாட உள்ளார்.