டிரம்பின் ஆசிய வருகையில் எதை எதிர்பார்க்கலாம்?
அமெரிக்க அதிபராக பதவியேற்றபின் முதல் முறையாக ஆசியாவுக்கு டிரம்ப் பயணம் மேற்கொள்வது உலகின் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் கொள்கை நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு அந்த நாடுகள் தொடர்ச்சியாக கேட்டு வருகின்றன.
நவம்பர் 5 முதல் 11 வரை கிழக்கு ஆசியாவில் பயணம் மேற்கொள்ளும் டிரம்ப் சீனா செல்லும் முன்பு தனது கூட்டாளி நாடுகளான ஜப்பான் மற்றும் தென் கொரியா செல்கிறார். வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் நடக்கும் பிராந்திய மாநாடுகளிலும் கலந்துகொள்கிறார்.
வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் பதற்றத்தை உருவாக்கியுள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் ராஜீய உத்திகள் ரீதியிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பயணம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
டிரம்ப் பதவிக்கு வந்த ஓராண்டு காலத்தில் கணிசமான பகுதியை அவரது கவனத்தை ஆக்கிரமித்த வட கொரிய விவகாரம், ஆசிய தலைவர்கள் உடனான அவரது சந்திப்பில் முக்கிய விவாதப்பொருளாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பராக் ஒபாமா பதவிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட, டி.டி.பி எனப்படும் பசிஃபிக்-தழுவிய நாடுகளின் கூட்டணி (Trans-Pacific Partnership) எனும் 12 நாடுகளைக் கொண்ட வர்த்தக உடன்படிக்கையில் இருந்து, டிரம்ப் பதவிக்கு வந்த ஒரே மாதத்தில அமெரிக்கா விலகியது ஆகியவற்றால், அமெரிக்காவின் புதிய வர்த்தக கொள்கைகள் குறித்தும் ஆசிய நாடுகள் அறிய விரும்புகின்றன.
நவம்பர் 5 அன்று ஜப்பான் செல்லும் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் கோல்ப் விளையாடிவிட்டு, அமெரிக்க-ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
நவம்பர் 6 அன்று ஜப்பான் மன்னர் அகிஹிடோவை முதல் முறையாக சந்திக்கும் அவர் 1970 மற்றும் 1980களில் வட கொரியாவால் கடத்தப்பட்ட ஜப்பானியர்களின் குடும்பங்களை சந்திக்கிறார்.
டி.டி.பி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது ஜப்பான் மீது நேரடி தாக்கம் கொண்டிருந்தது. 'அபேனாமிக்ஸ்' மூலம் ஜப்பான் பொருளாதாரத்தை மேம்படுத்த எண்ணியிருந்த பிரதமர் அபேவுக்கு அந்த உடன்படிக்கையை ஒரு முக்கிய தூணாக இருந்தது.
அமெரிக்கா இல்லாமல் அந்த ஒப்பந்தம் வீண் என்று நினைக்கிறார் அவர். ஆனால் அமெரிக்காவின் வேலைவாய்ப்புகளையும் வர்த்தகத்தையும் அது பாதிப்பதாக டிரம்ப் நினைக்கிறார்.
தென் கொரியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அந்நாட்டுக்கு அதே கவலைகள் உள்ளன.
நவம்பர் 7 அன்று அவர் தென் கோரிய தலை நகர் சோல் செல்லும்போது இது குறித்து விவாதிக்க அந்நாடு விரும்புகிறது.
அதிபர் மூன் ஜே-இன் உடன் சந்திப்பு மேற்கொள்ளும் டிரம்ப், தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் தலத்திற்கும் செல்லவுள்ளார்.
ராஜாங்க ரீதியில் அழுத்தம் தருவது உள்ளிட்ட வட கொரிய விவகாரங்களும் இந்த பேச்சு வார்த்தையில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று தென் கொரிய அதிபர் விரும்புகிறார்.
'அந்த சிறிய ராக்கெட் மனிதருடன் பேசி ரெக்ஸ் டில்லர்சன் நேரத்தை வீணடிக்கிறார்' என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி முன்னர் கூறியிருந்தார் டிரம்ப்.
கூட்டாளி நாடுகளுக்குச் சென்றபின் சீனா செல்கிறார் டிரம்ப். அங்கு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கிறார்.
உலகின் இரு பெரும் பொருளாதாரங்களின் தலைவர்கள் நவம்பர் 8 அன்று சந்திக்கின்றனர். டிரம்பின் முதல் சீன பயணத்தில் பல விடயங்கள் விவாதிக்கப்பட்டாலும், கொள்கை மாற்றங்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படவில்லை.
அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையில் பாதி சீனாவின் பங்கு. அமெரிக்காவின் அறிவுசார் சொத்துரிமையைத் திருடி சீனா மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க ஆகஸ்ட் மாதம் திரும்பி உத்தரவிட்டார். இதை சீன மறுத்தது.
இரு நாடுகளும் வட கொரிய விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று அமெரிக்காவுக்கான சீன தூதர் கூறியுள்ளார்.
வட கொரியா தனது அணு ஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என்றும் அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் தென் கொரியா கூட்டு ராணுவப் பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று இரு தரப்பும் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு சீன கூறியிருந்தது.
இரு தலைவர்களும் வெவ்வேறு நோக்கங்களுடன் இந்த சந்திப்பை மேற்கொள்கின்றனர் என்று நியூஸ் ஆசியா தொலைக்காட்சியின் இணையதளத்தில் எழுதபட்ட கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளும் பாதுகாப்பு மற்றும் ராஜாங்க ரீதியிலான உறவு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை குறித்த உத்தரவாதங்களை எதிர்பார்க்கின்றன.
வியட்நாமில் நவம்பர் 10-11 ஆகிய தேதிகளில் ஆசிய பசிஃபிக் பொருளாதார கூட்டமைப்பு (அபெக்) மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் (ஆசியான்) மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
ஆசியான் அமைப்பின் 50-வைத்து ஆனால் அமெரிக்காவின் ஆதரவுக்கு கரம் நீண்டால் அது அந்த நாடுகளுக்கு கூடுதல் சிறப்பு.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறவுள்ள கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்ளாததும் அந்த நாடுகளை கவலை அடையச் செய்துள்ளது.
நவம்பர் 10 அன்று இந்தோ-பசிஃபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் கொள்கைகள் குறித்து உரையாற்றுவது பெரிய எதிர்பார்பைக் கிளப்பியுள்ளது.
பிற செய்திகள்
- சென்னையில் மீண்டும் கன மழை; இயல்பு வாழ்க்கை முடக்கம்
- தற்காலிகமாக செயலிழந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு
- பிரமிட்டுக்குள் என்ன உள்ளது? கண்டுபிடிக்க கதிர் தொழில்நுட்பம்
- திரைப்பட நடிகரை எதிர்த்து நீதிமன்றம் சென்ற வங்கதேச ஆட்டோ ஓட்டுநர்
- இந்து தீவிரவாதம்: கமலின் கருத்துக்கு ஆதரவா? எதிர்ப்பா?