மலேசிய விமானம் எம்.ஹெச். 17க்கு என்ன ஆனது?: பக் ஏவுகணை தயாரிப்பாளர் அறிக்கை
மாஸ்கோ: மலேசிய விமானம் எம்.ஹெச். 17ன் இடது என்ஜினில் இருந்து 20 மீட்டர் தொலைவில் பக் ஏவுகணை வெடித்துச் சிதறியதாக பக் ஏவுகணை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பியது. விமானத்தில் 298 பேர் இருந்தனர். விமானம் கிழக்கு உக்ரைனில் பறக்கையில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது.
விமானத்தை உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப்படையினர் தான் தாக்கியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் உக்ரைன் ராணுவம் தான் சேகரித்து வைத்திருந்த பக் ஏவுகணையை பயன்படுத்தி விமானத்தை தாக்கியதாக ரஷ்யா தெரிவித்தது. விமானத்தை தாக்கிய பக் ஏவுகணை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வந்தது.
உக்ரைன் ராணுவ விமானம் என நினைத்து ரஷ்ய ஆதரவுப்படையினர் தான் மலேசிய விமானத்தை தாக்கினர் என்கிறார்கள் நிபுணர்கள்.
இந்நிலையில் இது குறித்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பக் ஏவுகணை தயாரிப்பு நிறுவனம் அல்மாஸ் அன்டே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், மலேசிய விமானத்தின் இடது என்ஜினில் இருந்து 20 மீட்டர் தொலைவில் ஏவுகணை வெடித்துள்ளது. மலேசிய விமானம் பக் ஏவுகணை வீசித் தான் தாக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.