மலேசிய அரசியல் புரட்சிக்கும் இந்தியாவுக்கும் எப்படி 'லிங்க்' ஆகுது பாருங்கள்!
Recommended Video
கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர், மகதீர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி பெற்றுள்ள வெற்றி என்பது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு ரொம்பவே பொருந்திப்போகும் சூழலை கொண்டுள்ளது.
இன்று வெளியாகியுள்ள மலேசிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. மலேசிய பங்குச் சந்தை ததிகினத்தோம் போடுகிறது.
ஆளும் Barisan Nasional (BN) கட்சி கூட்டணி படுதோல்வியடைந்ததில் அப்படி என்ன விஷேசம் இருக்க முடியும். அதிலும் இந்திய தேர்தலுக்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் பல ஒற்றுமைகள் உள்ளன.
அசைக்க முடியவில்லை
மலேசியாவில் சுமார் 60 வருடங்களாக அசைக்க முடியாத நிலையில் இருந்த ஆளும் கட்சி கூட்டணி இந்த தேர்தலில் தோற்றுள்ளது. இந்தியாவிலும் இதேபோன்ற சூழல் மத்தியில் நிலவுகிறது. அசைக்க முடியாத ஆளும் கட்சி என்ற பெயருடன் உள்ளது பாஜக. அதன் கூட்டணி கட்சிகள் வெளியேறினாலும் ஆட்சி அறுதி பெரும்பான்மையோடு இருக்க முடியும்.
பொருளாதார வீழ்ச்சி
கடந்த 3 ஆண்டுகளாக மலேசியாவில் ஆளும் நஜீப் ரசாக்கை ஊழல் குற்றச்சாட்டுகள் துரத்தின. மலேசியாவை சீரழித்துவிட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. மகதீர் முகமது காலத்தில் முன்னேற்ற பாதைக்கு வந்த மலேசிய பொருளாதாரம், நஜீப் ரசாக் காலத்தில் பின்னோக்கி செல்ல துவங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தியாவிலும், இப்போது அதேபோன்ற குரல்கள் எழுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான யாருக்குமே தண்டனை கிடைக்கவில்லை, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளால் பொருளாதாரத்தின் மீது பெரும் அடி விழுந்துள்ளது. போதா குறைக்கு, ஜிஎஸ்டி வேறு.
உள்ளூர் ஆதரவு
இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆட்சியை அசைக்க முடியாது என்ற கோஷங்கள் இந்தியாவிலும் எழுகின்றன. மலாய் மக்களின் ஆதரவு கட்சிகள் பலவும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்தன. இன ரீதியான அரசியல் முன்னெடுப்பு போலவே, இந்தியாவில் மதரீதியான முன்னெடுப்புகள் உள்ளன. இந்த பல ஒற்றுமைகளுக்கு நடுவே, ஒரே ஒரு வித்தியாசம், இந்தியாவில் எதிர்க்கட்சிகள் பிரிந்துகிடப்பதுதான்.
எதிரணிக்கு தாவும் ஆளும் தரப்பு
காங்கிரஸ் கட்சியையே 3வது அணியில் சேர்க்கப்போகிறார்களாம் என்று நெட்டிசன்கள் கேலி செய்யும் அளவுக்கு அணி பிரித்தலில் பெரும் குழப்பம். மகதீர் முகமது எப்படி ஆளும் கட்சியில் இருந்து எதிர் கூட்டணியில் சேர்ந்தாரோ அதேபோல இப்போது யஷ்வந்த் சின்ஹாவும், சத்ருகன் சின்ஹாவும் எதிரணியை ஓரணியாக்க முயல்கிறார்கள் சமீபத்தில் இருவரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விவசாரித்து சென்றனர்.
யார் அந்த மகதீர் முகமது?
இருப்பினும் அவர்கள் யாருமே, மகதீர் முகமது மலேசியாவில் செல்வாக்குள்ளவர்களை போல இந்தியாவில் செல்வாக்கு உள்ளவர்கள் இல்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணி இப்போது இந்தியாவிலும், ஒரு மகதீர் முகமதுவை தேடிக்கொண்டுள்ளது. அது யார் என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.