பாஸ்டன், பாரீஸ் இப்போ பிரஸ்ஸல்ஸ்: தீவிரவாத தாக்குதல்கள் நடத்திய சகோதரர்கள்
பிரஸ்ஸல்ஸ்: பாஸ்டன் மாரத்தான் தாக்குதல், சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதலை போன்று பிரஸ்ஸல்ஸ் விமான நிலைய தாக்குதல்களையும் நடத்தியது சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜாவென்டம் விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதையடுத்து மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது.
இந்த சம்பவங்களில் 34 பேர் பலியாகினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சகோதரர்கள்
விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது பக்ராவுய் எல் காலித் மற்றும் இப்ராஹிம் எல் பக்ராவுய் என்ற சகோதரர்கள் என போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். சிறு சிறு குற்றம் செய்து வந்த அவர்கள் தீவிரவாத தாக்குதல் நடத்துவார்கள் என்பது போலீசார் எதிர்பார்க்கவில்லையாம்.
விமான நிலையம்
விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த பக்ராவுய் சகோதரர்களுடன் மேலும் ஒருவர் வந்துள்ளார். ஆனால் அவர் கொண்டு வந்த குண்டு வெடிக்கவில்லை. தாக்குதல்களை அடுத்து விமான நிலையம் மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் இன்று மூடப்பட்டுள்ளன.
பாஸ்டன்
முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்தபோது 2 குக்கர் குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் பலியாகினர், 264 பேர் காயம் அடைந்தனர். அந்த தாக்குதல்களை நடத்தியது செசன்யாவை சேர்ந்த டமர்லான் மற்றும் ஜோகர் சார்னேவ் சகோதரர்கள். அதில் டமர்லன் போலீசார் சுட்டதில் பலியானார், ஜோகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
சார்லி ஹெப்டோ
கடந்த ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து கண் மூடித்தனமாக சுட்டு 11 பேரை கொலை செய்ததும் சகோதரரர்கள் தான். அவர்களின் பெயர் சயித் குவாச்சி, ஷெரிப் குவாச்சி ஆகும்.