சொர்க்க பூமியாக மாற்றிய தேசத்தந்தை லீ குவான் யூ… கலங்கும் சிங்கப்பூர்வாசிகள்
சிங்கப்பூர்: சிங்கப்பூரை சொர்க்க பூமியாக மாற்றிய தேசத்தந்தையின் லீ குவான் யூவின் மறைவு அந்நாட்டு மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பொது இடங்களில் தங்களின் தலைவருக்கு மலர்களை வைத்தும், இரங்கல் அட்டைகளை வைத்தும் தங்களின் துயரத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அவரது உடலிற்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாடு முழுவதும் 9 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுவதால் சுதந்திர பொன் விழா கொண்டாட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
ஒரு தலைவரின் வரலாறு
கடந்த 1923-ஆம் ஆண்டு பிறந்த லீ குவான் யூ பட்டப்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். 1959 ஆம் ஆண்டில் நண்பர்களுடன் இணைந்து மக்களின் நடவடிக்கை கட்சியை தொடங்கினர். இந்த கட்சி சார்பில் 1959ஆம் பிரதமராக பதவியேற்றார். மலேசியாவில் சிதறிக் கிடந்த சிங்கப்பூரின் பகுதிகளை 1965ஆம் ஆண்டு ஒன்றிணைத்து நவீன சிங்கப்பூரை அவர் உருவாக்கினார்.
சிங்கப்பூர் சிற்பி
சிங்கப்பூரின் தந்தை என்றும், நவீன சிங்கப்பூரின் சிற்பி என்றும் அழைக்கப்படும் லீ குவான் யூ தனது நேர்மையான நிர்வாகம், சிறந்த பொருளாதார கொள்கை போன்றவற்றின் மூலம் நாட்டை சர்வதேச நிலைக்கு உயர்த்தினார். மக்களுக்கு அடிப்படை சுகாதாரம், அனைவருக்கும் குடியிருக்க வீடுகள் கிடைக்க மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்.
31 ஆண்டு கால ஆட்சிக்குப்பின் 1990 ஆம் ஆண்டில் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்பு, அவரின் மகன் ஜூனியர் லீ பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
தேசத்தந்தையின் மறைவு
சமீபகாலமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார் லீ. கடந்த மாதம் 5ஆம்தேதி முதல் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். 91 வயதாகும் லீ நேற்று அதிகாலையில் உயிரிழந்தார்.
அறிவித்த மகன்
லீ குவான் யூ மரண செய்தியை அவரது மகனும், தற்போதைய பிரதமருமான லீ ஷியான் லூங் தொலைக்காட்சியில் அறிவித்தார்.
தனது தந்தையை பற்றி கூறிய லூங், ‘நமது விடுதலைக்காக பாடுபட்ட லீ குவான் யூ, எந்த வசதியும் இல்லாமல் இருந்த சிங்கப்பூரை வளமிக்க நாடாக உருவாக்கி உள்ளார். சிங்கப்பூர்வாசி என்பதில் நம்மை பெருமையடைய செய்துள்ளார். அவரைப்போல வேறொருவரை இனிமேல் பார்க்க முடியாது' என்று கண்ணீர் மல்க கூறினார்.
தலைவருக்கு அஞ்சலி
மரணச் செய்தி கேள்விப்பட்ட உடன் சிங்கப்பூர்வாசிகள் துயரத்தில் ஆழ்ந்தனர். ஏராளமான மக்கள் மருத்துவமனைக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் நேரில் சென்று மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
9 நாட்கள் துக்கம்
தேசத்தந்தையின் மறைவினை ஒட்டி 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. லீயின் உடல் மக்களின் அஞ்சலிக்காக நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வரும் 29ஆம் தேதி முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடைபெற்ற தலைவன்
உலகிலேயே வர்த்தகம் செய்ய விரும்புகிறவர்களின் சொர்க்க பூமியாகச் சிங்கப்பூர் இருக்கிறது. அதற்காகத் தியாகங்கள் சிலவற்றை மக்களைச் செய்யவைத்த அதிகார சூத்திரதாரியான லீ, ஊழலுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை வகுத்துச் செயல்படுத்தியதும் நல்ல பலன் தந்தது. அவர் தண்ணீருக்குக் கூடப் பக்கத்துத் தேசத்தை நம்பிக்கொண்டிருந்த மண்ணைத் தலைநிமிர்ந்து உலக வல்லரசுகளில் ஒன்றாக மாற்றிய திருப்தியோடு விடை பெற்றுக்கொண்டார்.