மாயமான மலேசிய விமானம்: தெரிந்ததும், தெரியாததும்...
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் குறித்த கேள்விகளில் நமக்கு பதில் கிடைத்தவையும், பதில் கிடைக்காதவையும் குறித்து பார்ப்போம்.
கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானத்தை 26 நாடுகள் தேடி வந்தன. இந்நிலையில் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்று மலேசியா அறிவித்துள்ளது.
ஆனால் விமானம் குறித்து நமக்கு தெரிந்தவை பற்றியும், இன்னும் பதில் கிடைக்காத கேள்விகள் பற்றியும் பார்ப்போம்.
விபத்து
விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது என்று செயற்கைக்கோள் தகவல்கள் தெரிவித்ததாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்தார்.
கடைசி இடம்
விமான விபத்துகளில் இதுவரை இல்லாத வகையில் இங்கிலாந்து நிறுவனம் ஒன்று செயற்கைக்கோள் தகவல்களை வைத்து மலேசிய விமானம் கடைசியாக இந்திய பெருங்கடலின் மத்தியப் பகுதியில் ஆஸ்திரேலியாவின் பெர்த் அருகில் இருந்தது என்று தெரிவித்துள்ளது.
பலி
விமானம் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த சிப்பந்திகள், பயணிகள் என்று 239 பேரும் பலியாகிவிட்டனர் என்று அறிவிக்கப்பட்டபோதிலும் அதை முழுமையாக நம்ப பலர் தயாராக இல்லை.
எப்படி?
சீனா சென்ற விமானம் மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் சுமத்ராவுக்கு இடையே உள்ள மலாக்கா ஜலசந்தி நோக்கி திரும்பியுள்ளது. அதன் பிறகு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. விமானம் எதற்காக திரும்பியது என்றும் தெரியவில்லை.
பொருட்கள்
தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் பொருட்களை கண்டதாக பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் தெரிவித்தன. ஆனால் அந்த பொருட்கள் மாயமான விமானத்தின் உடைந்த பாகங்கள் தானா என்பதை மலேசிய பிரதமர் தெரிவிக்கவில்லை.
ஆதாரம்
இங்கிலாந்து நிறுவனம் ஒன்று அளித்த தகவலை மட்டும் வைத்து மாயமான விமானம் கடலில் மூழ்கியதாக மலேசியா அறிவித்துள்ளது. ஆனால் விமானம் கடலில் மூழ்கியதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்பது குறித்து அது தெரிவிக்கவில்லை.