கருப்புத் தோல், சிவப்பு கண்கள், நீண்ட மூக்கு... 1000 வருடங்களில் ‘சூப்பராக’ மாறப் போகும் மனிதர்கள்!
வாஷிங்டன்: அடுத்த ஆயிரம் ஆண்டுகளில் மனிதனின் பரிணாம வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற கற்பனை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்கிறது அறிவியல். ஒவ்வொரு காலகட்டத்திலும் விதவிதமான பரிணாம வளர்ச்சி அடைந்து தற்போது இந்த உடலை நாம் பெற்றுள்ளோம்.
ஆனால், பருவநிலை மாறுபாடு, பூமி வெப்பமடைதல் உள்ளிட்ட காரணங்களால் மனிதர்களின் தோற்றத்தில் இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
1000 ஆண்டுகளில்...
இது தொடர்பாக கனடா நாட்டைச் சேர்ந்த யுடியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் மனிதன் எப்படி இருப்பான் என்பது குறித்து கூறப்பட்டுள்ளது.
மனித உடலில் மாறுதல்கள்...
வரும் காலங்களில் பருவநிலை மாறுபாடு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மரபணு மாறுபாடு போன்ற காரணங்களால் மனிதர்களின் உடலில் மிகப் பெரிய மாறுதல்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
ஒல்லியாக, உயரமாக....
பூமி வெப்பம் அடைவதால் மனிதர்களின் தோல் மிகக் கறுப்பாக மாறிவிடும். பருவநிலை மாறுபாட்டால் உயரமாகவும் ஒல்லியாகவும் மாறிவிடுவார்கள்.
120 ஆண்டுகள்...
மனிதர்களின் கண்கள் சிவப்பாக மாறி விடும். அதே போல் மனிதனின் ஆயுட்காலமும் 120 ஆண்டுகளாக அதிகரிக்கும் என்கிறது இந்த வீடியோ.
சூப்பர்மேன்கள்...
அதோடு மரபணு மாறுபாட்டால் சூப்பர் மனிதனுக்குரிய திறமைகளும் மனிதர்களுக்கு கிடைக்குமாம். அதன் மூலம் மனிதன் மேலும் புத்திசாலியாகவும், உறுதியாகவும், தோற்றப் பொலிவுடனும் காணப்படுவான் என்கிறார்கள்.
பெரிய கண்கள்...
இது குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆலன் க்வான் கூறுகையில், ‘‘மனித முகம் மெதுவாக மாற்றம் அடையும். தோல் சுருங்குவது குறையும். மூளை பெரிதாகும். நேரான முக்கும் முன்னோக்கி நீண்டிருக்கும் பெரிய கண்களுமாக மனித முகம் மாறிவிடும்'' என்கிறார்.
வைரல் வீடியோ...
கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான இந்த வீடியோவை இதுவரை 16 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர். வைரலாக இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.