2010ல் சீரழிந்த சிலியை மீண்டும் தாக்கிய பெரும் பூகம்பம்... அர்ஜென்டினாவும் அதிர்ந்தது!
சிலியில் 2010ம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தால் அந்த நாட்டை சுனாமி தாக்கி பேரழிவு ஏற்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு பெரும் பூகம்பம் சிலியைத் தாக்கியுள்ளது.
சான்டியாகோ: சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் எதிரொலியாக அர்ஜென்டினாவின் தென் மேற்கு வரை அதிர்வு உணரப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் பெரும் சேதத்தைச் சந்தித்திருப்பதாகவும், சிலியில் மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
சிலியின் கடலோரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அர்ஜென்டினாவின் தென் மேற்கில் உள்ள பார்லியோச் நகரில் பலர் நில அதிர்வை உணர்ந்துள்ளனர். பயத்தில் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
சிலி நாட்டில் நிலநடுக்கம் புதிதில்லை. நிலநடுக்கத்தால் அது பலமுறை கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. 2010ம் ஆண்டு 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சிலியைத் தாக்கியது. தென் மத்திய கடலோரத்தில் இந்த நிலநடுக்கம் அப்போது ஏற்பட்டது. அப்போதும் சுனாமி தாக்கி கடலோர நகரங்கள் பல பேரழிவைச் சந்தித்தன என்பது நினைவிருக்கலாம்.
இப்போதும் சிலி நாட்டில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்றே தெரிகிறது. இதுவரை சேத விவரம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.