நாடே சோகத்தில் மூழ்கியுள்ளபோது கோல்ப் விளையாடிய மலேசிய ராணி
கோலாலம்பூர்: மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் கடலுக்குள் விழுந்த சோகத்தில் மலேசியா இருக்கையில் அந்நாட்டு ராணி கோல்ப் விளையாடியது பலரையும் வியக்க வைத்துள்ளது.
கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் கடலுக்குள் விழுந்தது என்றும், அதில் பயணம் செய்த அனைவரும் இறந்துவிட்டனர் என்றும் மலேசியா அறிவித்துள்ளது. இதனால் பயணிகளின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த சம்பவத்தால் மலேசிய மக்கள் கவலையில் உள்ளனர்.
விமானம் கடலுக்குள் விழுந்தபோதிலும் அதன் பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இந்திய பெருங்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக விமானத்தை தேடும் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மலேசிய ராணி ரஜா அகோங் டுவாங்கு ஹஜா ஹமினா கோலாலம்பூரில் நேற்று நடந்த கோல்ப் போட்டியில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக விளையாடினார்.
மலேசிய விமானம் கடலில் விழுந்த சோகத்தில் மக்கள் இருக்கையில் மலேசிய ராணி கோல்ப் விளையாடியதை அந்நாட்டு ஊடகங்கள் கண்டித்துள்ளன.