'கொழந்தசாமி அவசரப்படாத... ட்ரம்ப் அப்படி எதுவும் அறிவிக்கல!' - வெள்ளை மாளிகை அறிக்கை
வாஷிங்டன்: வட கொரியா மீது அமெரிக்கா போர் அறிவித்திருப்பதாக கிம் ஜாங் உன் கூறியிருப்பது தவறு. அதிபர் ட்ரம்ப் அப்படி எதுவும் அறிவிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வட கொரியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் பிரகடனம் செய்திருப்பதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் ரி யாங் யோ சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதனால் அமெரிக்காவின் நிலைகளைத் தகர்க்க வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
"கிம் ஜாங் உன்னின் தலைமை ரொம்ப நாள் நிலைக்காது. வட கொரியாவை அழிப்போம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது எங்கள் நாட்டின் மீதான போர்ப் பிரகடனம்தான். எனவே வட கொரிய எல்லைக்கு அப்பாலிருந்தாலும் அமெரிக்க போர் விமானங்கள், கப்பல்களை தாக்கி அழிப்போம்," என ரி யாங் யோ கூறினார்.
இது பெரும் பதட்டத்தை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா ஹக்காபி சான்டர்ஸ் ஒரு மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "வட கொரியா மீது அமெரிக்கா போர்ப் பிரகடனம் செய்யவில்லை. அதிபர் ட்ரம்ப் அப்படி எங்கும் சொல்லவுமில்லை. காரணமே இல்லாமல் ஒரு நாட்டின் விமானத்தை சுட்டு வீழ்த்துவது இன்னொரு நாட்டுக்கு அழகல்ல..," என்று கூறியுள்ளார்.