தாத்தா தாத்தா சிங்கத்தை காட்டில் கொண்டு போய் விடுங்க தாத்தா.. மெக்சிகாவில் ஒரு கர்ஜனை கலாட்டா!
மெக்சிகோவில் 3 சிங்கங்களை ஒருவர் மொட்டை மாடியில் வளர்த்து வருகிறார்.
மெக்சிகோ சிட்டி: என் 3 பேரக்குழந்தைகளையும் என்கிட்ட இருந்து பிரிக்க யாராலும் முடியாது. எனக்கு என் பேரக்குழந்தைகளை வளர்க்க எல்லா உரிமையும் இருக்கு என்று சற்று கோபமாகவே சொல்கிறார் மெக்சிகோ நபர் ஒருவர்!
இவர் சொல்ற மாதிரி அது நிஜமான பேரக்குழந்தைகளாக இருந்தால் பரவாயில்லையே... வரிந்து கட்டிக் கொண்டு நாமும் சேர்ந்து அவருக்கு சப்போர்ட் பண்ணலாம். ஆனால் இவர் பேரக்குழந்தைகள் என்று சொல்வது பயங்கரமான 3 சிங்கங்கள் ஆயிற்றே... நாம வரிந்து கட்டிக் கொண்டு ஓடவேண்டியதுதான்!!
தாங்க முடியாத கர்ஜனை
மெக்ஸிகோவில் தன் வீட்டு மொட்டை மாடியில் இந்த 3 சிங்கங்களை வைத்துக் கொண்டு இவர் பண்ணும் அளப்பறை தாங்க முடியலயாம். இந்த சிங்கங்களை வளர்த்து வரும் இவரது பெயர் ஒமர் ரோட்ரிகஸ். இந்த 3 சிங்கங்களை பராமரிப்பதும், கொஞ்சி விளையாடுவதும் எல்லாம் சரிதான்... ஆனால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு சிங்கங்கள் கர்ஜிப்பது தாங்க முடியலையாம்.
வேண்டுகோள் விடுத்தனர்
இவர் வசிக்கும் இடம், ஒமர் என்ற பகுதி. அந்த இடம் ரொம்பவே ஜன நெருக்கடி இருக்கக்கூடிய பகுதியாம். ஒவ்வொரு முறையும் சிங்கங்கள் கத்துவது எல்லாருக்குமே காதில் விழுந்து அள்ளு கிளப்புகிறது. அதனால் அதிகாரிகளிடம் முறையிட்டார்கள். அதிகாரிகளும் விரைந்து வந்து, வீட்டில் இருந்து சிங்கங்களை வெளியேற்றுங்களேன் என்று வேண்டுகோள் வைத்தார்கள்.
வெள்ளை நிற சிங்கம்
கண்டிஷனுடன் அதிகாரிகள் ஏன் சொல்லவில்லை தெரியுமா? இப்படி சிங்கங்களை வளர்க்க முறையான ஆவணங்களை வைத்திருக்கிறார் மனுஷன்! அதனாலதான் அதிகாரிகள் மென்னுமுழுகி கெஞ்சினார்கள். ஆனாலும் அசரையே நம்ம ஆள். வருபவர்களிடம், "அழிந்து வரும் வெள்ளை நிற சிங்கங்களை தன் பேரக் குழந்தைகள் பார்க்க வேண்டும்" என்று அட்வைஸ் வேறு தருகிறார்.
சிங்க தாத்தா
இதே கருத்தை யுனிவர்சல் என்ற நாளிதழுக்கு பேட்டியும் அளித்துள்ளார். பேரக்குழந்தைகள் என்று சொல்லும் இந்த சிங்கங்களை 20 வருஷங்களாகவே வளர்த்து வருகிறாராம் இந்த "சிங்க தாத்தா".