தடுப்பூசி கொடுத்ததற்கு ரொம்ப தேங்ஸ்... பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
ஜெனீவா: அண்டை நாடுகளுக்குத் தடுப்பூசி வழங்கி உதவியதற்குப் பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா குறித்த செய்திகளும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசியே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி
அதன்படி இந்தியாவிலும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் கடந்த ஜூன் 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக நாடு முழுவதும் இருக்கும் மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் உள்ள வயதானவர்கள் பலவீனமாக உள்ளவர்கள் என மொத்தம் 27 கோடி பேருக்குத் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி பூட்டான், மாலத்தீவு, நேபாளம், மியன்மார், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளுக்கு இந்தியா இலவசமாக அனுப்பியது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பின் இலவசமாக கொரோனா தடுப்பூசி அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிரேசில், மொராக்கோ, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு வணிக ரீதியாகவும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடிக்கு நன்றி
இந்நிலையில், அண்டை நாடுகளுக்குத் தடுப்பூசி வழங்கி உதவியதற்குப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர்ச்சியான ஆதரவை அளித்துவரும் இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி. அறிவைப் பகிர்வது உட்பட அனைத்திலும் நாம் ஒன்றாகச் செயல்பட்டால் மட்டுமே, கொரோனா பரவலைத் தடுத்து, உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற முடியும்" என்றார்.
அதிக தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நாடு
உலகளவில் அதிக மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. கொரோனா பரவலை எதிர்த்துப் போராட இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக திறன் உலக நாடுகளுக்குப் பயன்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்குத் தேவையான தடுப்பூசியை உற்பத்தி செய்து, விநியோகிக்கும் பொறுப்பு சீரம் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.