எபோலா நோய் பலி எண்ணிக்கை 7,000 ஆக உயர்வு : உலக சுகாதார நிறுவனம் தகவல்!
லண்டன்: எபோலோ வைரஸ் நோய்க்கு இதுவரை சுமார் ஏழாயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது எபோலா வைரஸ் நோய். இந்நோய்க்கு எதிராக உலக சுகாதார அவசரநிலையை பிரகடனப் படுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம். இந்நோயின் தாக்கம் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது.
லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய 3 நாடுகளிலும் இந்நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இது தவிர நைஜீரியா, மாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட மேலும் 5 நாடுளிலும் இந்நோய் பரவியுள்ளது.
எபோலாவை முற்றிலும் குணப்படுத்தக் கூடிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படாததால், இந்நோய் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை சர்வதேச நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், எபோலா நோய் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இந்நோய்க்கு இதுவரை 6,928 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதிலும், குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் இந்த நோய் தாக்கி 1000 பேர் பலியாகி உள்ளதாக அந்நிறுவனம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
தற்போது லைபீரியாவில்தான் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு எபோலா நோய் தாக்கிய 7,244 பேரில் 4,181 பேர் இறந்துள்ளனர். சியாராலோனில் பாதிக்கப்பட்ட 6,802 பேரில் 1,463 பேரும், கினியாவில் 2,123 பேரில் 1,284 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தற்போது எபோலா நோய் தாக்கம் சியாராலோன் நாட்டில் அதிகம் உள்ளது. அதே நேரத்தில் லைபீரியாவில் குறைந்துள்ளது. கினியா, சியாராலோன் நாடுகளில் மட்டும் 16 ஆயிரம் பேர் இந்த நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.