ஒரே நம்பிக்கை... ஃபைசர் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்த உலக சுகாதார அமைப்பு
ஜெனிவா: ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலகெங்கும் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள வேகமாகப் பரவும் உருமாறிய கொரோனாவின் பரவலும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் சுமார் 2.28 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல பிரேசில் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் நேற்று ஒரே நாளில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
ஒரே நம்பிக்கை
தடுப்பு மருந்து மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தற்போது ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் ஆகியவற்றின் தடுப்பு மருந்துகள் மூன்றுகட்ட மருத்துவ சோதனைகளை முடித்துள்ளன. இவற்றில் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துகளுக்கு பல்வேறு நாடுகளும் அனுமதியளித்துள்ளன.
உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்
இந்நிலையில், ஃபைசர் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் பெற்ற முதல் கொரோனா தடுப்பு மருந்தாக ஃபைசர் உருவெடுத்துள்ளது.
உலகளாவிய முயற்சி தேவை
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் மரியாங்கெலா சிமாவோ கூறுகையில், "கொரோனா தடுப்பு மருந்தின் உலகளவில் பயன்பாட்டை உறுதி செய்வதில் இது மிகவும் முக்கிய நடவடிக்கையாகும். ஆனால், எல்லா நாடுகளிலும் முதலில் தேவையான மக்களுக்குத் தடுப்பு மருந்து வழங்கப்பட வேண்டும். இதை உறுதி செய்ய இன்னும் பெரிய உலகளாவிய முயற்சிகளே தேவை"என்றார்.
யுனிசெஃப்- பான் அமெரிக்க சுகாதார அமைப்பு
ஃபைசர் தடுப்பு மருந்திற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இது பல்வேறு நாடுகளும், தங்கள் நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்தின் இறக்குமதி மற்றும் விநியோகம் ஆகியவற்றை விரைவில் அங்கீகரிக்க வழி வகுக்கிறது. மேலும், கொரோனா தடுப்பு மருந்தைத் தேவையான நாடுகளுக்குக் கொள்முதல் செய்ய யுனிசெஃப் மற்றும் பான்-அமெரிக்க சுகாதார அமைப்பிற்கு அனுமதி தருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஃபைசர் தடுப்பு மருந்து
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பு மருந்தின் அவசரக்கால பயன்பாட்டிற்கு முதல் நாடாகப் பிரிட்டன் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி அனுமதியளித்தது. உலக சுகாதார அமைப்பு வகுத்துள்ள பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான கட்டாய அளவுகோல்களைப் பூர்த்தி செய்துள்ளதாலேயே ஃபைசர் தடுப்பு மருந்திற்கு அனுமதியளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தங்கள் நிறுவனத்தின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதி கோரி ஃபைசர் விண்ணப்பித்துள்ளது.