கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து தரும் சோதனையை நிறுத்தியது உலக சுகாதார அமைப்பு
குளோரோகுயின் மருந்து தரும் சோதனையை நிறுத்துவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதனை ஏற்று இந்தியாவும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் இருந்து வருகிறது.
இந்தியாவில் மலேரியா காய்ச்சலுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் என பரிசீலிக்கப்பட்டது. அத்துடன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்தான் இப்போது தேவை என அமெரிக்காவும் அடம்பிடித்து இறக்குமதி செய்தது.
உலகின் பலநாடுகளும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியாவிடம் இருந்து பெற்று கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்தன. இருப்பினும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தால் கொரோனா சிகிச்சையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இம்மருந்தை பயன்படுத்துவதை நிறுத்தின. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாட்டை நிறுத்தியிருக்கிறது. அதேபோல் லோபினாவிர், ரிடோனாவி ஆகிய மருந்துகளை கொடுப்பதையும் உலக சுகாதார அமைப்பு நிறுத்திவிட்டது.
உலக சுகாதார அமைப்பின் இந்த முடிவை இந்தியாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான முயற்சிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ஹைட்ராக்சிகுளோரோகுயினுக்குப் பதிலாக வேறு மருந்துகளை பயன்படுத்தி சோதனை நடத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.