டெக்சாஸில் 26 பேரை சுட்டுக் கொன்ற நபர் யார்... விசாரணையில் துப்பு துலங்கியது
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகணத்தில் கொடூரமாக துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார் என்பதில் தற்போது துப்பு துலங்கி இருக்கிறது.
டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொடூரமான துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.
டெக்சாஸ் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் நேற்று தேவாலயத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். காரை தேவாலயத்திற்கு அருகில் நிறுத்திய அவர் வேகமாக இறங்கி சுட ஆரம்பித்தார் .
இவர் நடத்திய மோசமான துப்பாக்கி சூட்டில் மொத்தம் 26 பேர் பலியாகினர். இதில் காயமடைந்த நிறைய பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த கொடூரமான துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் குறித்த தகவல்கள் அமெரிக்க உளவுத் துறையை கதிகலங்க வைத்து இருக்கிறது. அமெரிக்க விமான படையை சேர்ந்த நபர்தான் துப்பாக்கி சூடு நடத்தினார் என தெரியவந்துள்ளது.
டெக்சாஸில் கொடூரமான தாக்குதல்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பாப்டிஸ்ட் தேவாலயம் ஒன்று உள்ளது. அந்த பகுதியில் அமைக்கப்பட்ட முதல் பாப்டிஸ்ட் தேவலாயமான அதில் நேற்று காலை பிரார்த்தனை கூட்டம் நடந்தது. அப்போது வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் வந்து கண்மூடித்தனமாக சுட்டார். தனது காரை தேவாலயத்திற்கு அருகில் நிறுத்திய அந்த நபர் வேகமாக காரில் இருந்து இறங்கி சுட ஆரம்பித்தார்.
உயர்ந்த பலி எண்ணிக்கை
இந்த தாக்குதல் காரணமாக பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 26 பேர் பலியாகினர். பலியானவர்களில் இரண்டு குழந்தைகளும் அடக்கம். இதில் 20 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. காயமடைந்த அனைவரும் மிகவும் மோசமான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சுட்டவர் தற்கொலை
இந்த நிலையில் இந்த கொடுரமான துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் தனது காருக்குள் மீண்டும் சென்று துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சரியாக ஒரு மணி நேரத்திற்கு பின் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் காரில் இறந்து கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரது துப்பாக்கியை எடுத்து தற்போது போலீசார் பரிசோதனை செய்து வருகின்றனர்.
துப்பாக்கி சூடு நடத்தியது யார்
இந்த நிலையில் இந்த கொடூரமான துப்பாக்கி சூடாய் நடத்தியது யார் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. 'டேவின் பேட்ரிக்' என்ற அந்த 26 வயது நிரம்பிய நபர் அமெரிக்க விமானப்படையில் பணிபுரிந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் சில வருடங்களுக்கு முன்பு அவரது மனைவியையும், குழந்தையையும் கொடுமை படுத்திய விவகாரத்தில் 1 வருடம் சிறை தண்டனை பெற்றிருந்தார். இதன் காரணமாக அவரது வேலை பறிபோனதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு கோணங்கள்
இந்த நிலையில் இந்த கொலைக்கு இரண்டு விதமான காரணங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . அதன்படி கொலை செய்த டேவின் தனது வேலை போன விரக்தியில் இப்படி செய்து இருக்கலாம் என்கிறார்கள். இல்லை என்றால் அவரது விரக்தியை வேறு ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கம் பயன்படுத்தி இப்படி செய்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.