அப்போது காலேஜ் டிராப்-அவுட்.. இப்போது நிலவிற்கு செல்ல போகும் கோடீஸ்வரன்.. யார் இந்த யுசாகு மேசாவா?
Recommended Video
நியூயார்க்: ஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா என்ற நபர்தான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவிற்கு செல்ல இருக்கிறார். இவரது கதை மிகவும் விசித்திரமானது ஆகும்.
ஜப்பானை சேர்ந்த யுசாகா மேசாவா என்ற கோடீஸ்வரரை நிலவிற்கு அழைத்து செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முதல்முறையாக இந்த சாதனையை செய்ய உள்ளது.
இன்று அதிகாலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைமையகத்தில் நடந்த விழாவில் இது குறித்த அறிவிப்பு வெளியானது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 2017ல் இருந்தே, நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது.
|
அறிவித்தது
நிலவிற்கு செல்ல போகும் ஜப்பானை சேர்ந்த யுசாகு மேசாவா உலகம் முழுக்க வைரலாகி உள்ளார். இவரும் எலோன் மஸ்க்கும் நெருங்கிய நண்பர்களாம். அதாவது உலகிலேயே முதல்முறையாக காசு கொடுத்து நிலவிற்கு செல்ல போகும் அந்த நபர் இவர்தான். யுசாகா மேசாவா ஜப்பானை சேர்ந்தவர். ஜப்பானில் உள்ள மிகப்பெரிய 17 கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர்.
|
ஜப்பானில் பிறந்தார்
1975ல் பிறந்த இவருக்கு தற்போது 42 வயதாகிறது. ஜப்பானில் உள்ள காமாக்யா என்ற கிராமத்தில் மிகவும் நடுத்தரமான குடும்பத்தில் பிறந்தவர் இவர். இவரது பெற்றோர் பல்வேறு வேலைகளை பார்த்துவிட்டு, நிலையாக ஒரு இடத்தில் இல்லாமல் ஜப்பான் முழுக்க மாறி மாறி வாழ்ந்து இருக்கிறார்கள். இவரும் சரியாக பள்ளியில் படிக்காமல் சுற்றி இருக்கிறார்.
கல்லூரியை விட்டு சென்றார்
இந்த நிலையில் 1991ல் இவர் பள்ளி படிப்பை அப்படி, இப்படி கஷ்டப்பட்டு முடித்துள்ளார். அதன்பின், கல்லூரி பக்கமே செல்லவில்லை. பொருளாதார சூழ்நிலை காரணமாக கல்லூரியில் படிப்பதை வெறுத்துள்ளார். இதனால் அமெரிக்காவிற்கு சென்று அங்கே ஸ்கேட் போர்ட் பயிற்சியில் ஈடுபட்டு விளையாடி இருக்கிறார்.
காதலியுடன் ஊர் சுற்றினார்
அதன்பின், அமெரிக்காவின் நியூயார்க் தெருக்களில் காதலியுடன் சுற்றி உள்ளார். கிட்டத்தட்ட 5 வருடங்களை இப்படியே வீணடித்ததாக அவர் கூறியுள்ளார். இந்த ஐந்து வருடம் முழுக்க அமெரிக்காவில் அப்போது வந்த புகழ்பெற்ற பாடல்களின் சீடியை வாங்கி குவித்து உள்ளார். ஆனால் அந்த சீடிக்கள்தான் இவர் வாழ்க்கையை மாற்றியுள்ளது.
தொடங்கினார்
அமெரிக்காவில் இருந்து 1996 திரும்பி வந்தவர், அந்த சீடிக்களை விற்க போவதாக அறிவித்தார். மைக்கேல் ஜாக்சன் உட்பட பலரின் அமெரிக்க பாடல்களை கேட்க கூட்டம் அலைமோதியது. உடனே இணையம் மூலம் இதை விற்க போகிறேன் என்று கூறினார். இமெயில் மூலம் ஆர்டர் எடுத்து அதை எல்லோரிடமும் விற்றார். அதுதான் அவர் கம்பெனி தொடங்க முக்கிய காரணமாக அமைந்தது.
ஸ்டார்ட் டுடே நிறுவனம்
இரண்டே வருடத்தில் 1998ல் இவர் ஸ்டார்ட் டுடே என்று நிறுவனத்தை தொடங்கினார். ஆம் இமெயில் மூலம் ஆர்டர் எடுத்து விற்பனை செய்யும் இணைய நிறுவனம் ஆகும் இது. அதன்பின் 2000ல் ஸ்டார்ட் டுடே நிறுவனம் இணைய பக்கமாக மாறியது. அதன் மூலம் உடை, வீட்டிற்கு தேவையான பொருட்கள் என்று அனைத்தையும் இணையம் மூலம் விற்க தொடங்கினார்.
புதிய நிறுவனத்தை தொடங்கினார்
அதன்பின் அதில் வந்த வருமானத்தை வைத்து, 2004ல் சோசோடவுன் என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் 5 வருடங்களில் ஜப்பானின் பெரிய 10 நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. ஜப்பானின் நம்பர் 1 ஆன்லைன் விற்பனை நிறுவனமாக உருவெடுத்தது. இப்போதும் அங்கு இந்த நிறுவனம்தான் நம்பர் ஒன்.
கோடீஸ்வரர்
இதை தொடர்ந்து பல கிளை நிறுவனங்களை இவர் தொடங்கினார். இவர் கடந்த 4 வருடமாக உலகின் பெரிய பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்து வருகிறார். போர்ப்ஸ் பத்திரிகை உலகின் 100 முக்கிய நிறுவனங்களில் இவரின் நிறுவனத்தையும் ஒன்றாக சேர்த்துள்ளது. கலை பொருட்களில் ஆர்வம் உள்ள இவர், அதற்கு என்று தனி பவுண்டேஷன் ஒன்றையும் வைத்துள்ளார்.
நிலவு பயணம்
இந்த நிலையில் இவர்தான் 2023ம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவிற்கு செல்கிறார். இந்த நிலவு பயணத்திற்கு இவர் பணம் கொடுத்துள்ளார். உலகிலேயே பணம் கொடுத்து நிலவிற்கு செல்லும் முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
|
என்ன செய்ய போகிறார்
அதோடு இவர் இதுகுறித்து பேசும்போது ''நிலவிற்கு நான் சிலரை அழைத்து செல்ல நினைத்தேன். மைக்கேல் ஜாக்சன் நிலவிலேயே மூன் வாக் செய்தால் எப்படி இருக்கும், பிக்காஸோ நிலவில் நின்று பூமியை வரைந்தால் எப்படி இருக்கும். இப்படி உலகின் சிறந்த கலைஞர்களை நிலவிற்கு அழைத்து செல்ல நினைத்தேன். ஆனால் இவர்கள் எல்லாம் இப்போது உயிரோடு இல்லை'' என்றுள்ளார்.
|
யாரை எல்லாம்
இதனால், நிலவிற்கு தற்போது உலகில் உயிரோடு உள்ள சிறந்த கலைஞர்களை, இசையமைப்பாளர்களை அழைத்து செல்ல இருக்கிறேன். என்னுடன் 7ல் இருந்து 8 பேர் வர இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம். நானே இந்த நிலவு பயணத்திற்கு பணம் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். விரைவில் இவர்களை தேர்வு செய்வேன் என்றும் இவர் கூறியுள்ளார்.
|
வைரல் ஆசாமி
நேற்று உலகம் முழுக்க இவரை பலர் தேடி இருக்கிறார்கள். ஜப்பானுக்கு வெளியே இவரை பலருக்கு தெரியவில்லை. அதனால் இவர் யார் யார் என்று எல்லோரும் கூகுளில் தேடி இருக்கிறார்கள். இதனால் நேற்று நாளில் இவர் இணையம் முழுக்க வைரலாகி உள்ளார்.