கொரோனா தடுப்பு மருந்து...விரைவில் கிடைக்க...கோவாக்ஸில் சேருகிறதா இந்தியா!!
ஜெனீவா: உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பு ஊசி மருந்துகளை சமமாக, விரைந்து கிடைப்பதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் கோவாக்ஸ் அமைப்பில் இந்தியாவையும் சேர்ப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து உலக நாடுகளுக்கு தற்போது விரைவாக கிடக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. நவம்பர் மாத துவக்கத்தில் தனது நாட்டில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு வழங்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவும் நடப்பாண்டு இறுதிக்குள் இந்த மருந்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அறவித்துள்ளது. சீனாவும் தனது நாட்டு ராணுவத்தினருக்கு ஏற்கனவே தடுப்பு மருந்தை செலுத்தி வருகிறது.
ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்து இருக்கும், இந்தியாவில் கோவிஷீல்டு என்று அழைக்கப்படும், தடுப்பு மருந்து நடப்பு வாரத்தில் மனிதர்களுக்கு இரண்டாம், மூன்றாம் கட்ட மனித பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் தயாரித்து இருக்கும் கோவாக்சின் மருந்து மனித பரிசோதனையில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த தடுப்பு மருந்துகளில் எந்த மருந்து முதலில் வெளியானாலும், அந்த மருந்தை வாங்கி அனைத்து நாடுகளுக்கும் சமமாக விரைவில் வழங்குவதற்கும், மருந்தை விரைந்து கொண்டு வருவதற்கும், எளிதாக மக்களுக்கு கிடைப்பதற்கும் உலக சுகாதார நிறுவனம் கோவாக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறது. இந்த அமைப்பில் இந்தியாவையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் புரூஸ் அய்ல்வார்டு ஜெனீவாவில் அளித்து இருக்கும் பேட்டியில், ''கோவாக்ஸ் அமைப்பில் சேருவதற்கு மற்ற நாடுகளைப் போல் இந்தியாவும் அனைத்து வகையிலும் தகுதி பெற்றது. அந்த நாட்டை இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் உலகம் முழுக்க 194,008 பேருக்கு கொரோனா.. அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிப்பு.. முழு விபரம்!
உலக சுகாதார நிறுவனமும், கவி தடுப்பு மருந்து நிறுவனமும் இணைந்து இந்த அமைப்பை உருவாக்கியுள்ளன. இவற்றின் நோக்கமே, நாடுகளின் 20% மக்கள் தொகைக்கு இந்த தடுப்பு மருந்து கிடைக்க வழி செய்வது, விரைவில் மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்வது, கொரோனா வீரியத்தின் தாக்கத்தை முதலில் குறைப்பதுதான் மூலம் பொருளாதாரத்தை மீட்பது இந்த அமைப்பின் லட்சியம் ஆகும்.
இந்த அமைப்பில் சேருவதற்கு அமெரிக்கா விரும்பவில்லை என்று ஏற்கனவே தெரிவித்துவிட்டது. தங்களது நாட்டு மருந்தையே வைத்து மக்களுக்கு அளிப்பதாக கூறியுள்ளது.