"வாய்ப்பில்ல ராஜா.."கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது.. ஓமிக்ரான் லேசானது இல்லை- WHO தந்த வார்னிங்
ஜெனீவா: ஓமிக்ரான் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளையும் இப்போது அலறவிட்டுக் கொண்டிருப்பது ஓமிக்ரான் கொரோனா தான். இதனால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் கூட வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனால் பல்வேறு நாடுகளும் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அல்லது அதற்கு இணையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
ஓமிக்ரான் பரவுது.. நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
ஜெர்மனி
இருப்பினும், பெரும் பெரும்பாலான நாடுகளில் வைரஸ் பாதிப்பு சுத்தமாகக் குறையவில்லை. ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக ஜெர்மனியில் தினசரி கேஸ்களின் எண்ணிக்கை லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 1.12 லட்சம் பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளது. மேலும் 239 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 70% பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பா
அதேபோல பிரான்ஸ் நாட்டிலும் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கடந்த ஒரே வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் 50 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஐரோப்பியச் சுற்றுலாத் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 2024 வரை ஐரோப்பியச் சுற்றுலாத் துறை பழையபடி திரும்ப வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
உலக நாடுகள்
ஐரோப்பா மட்டுமில்லை உலகின் பல்வேறு நாடுகளிலும் இதே நிலை தான். பிரேசில் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 1.37 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதேபோல அங்கு உயிரிழப்பும் மீண்டும் அதிகரித்துள்ளது. ஜப்பான் நாட்டில் ஓமிக்ரான் பரவலுக்குப் பின்னர் வைரஸ் கேஸ்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதாகக் கருதப்பட்ட சீனாவிலும் கூட வைரஸ் கேஸ்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இப்போது முடியாது
ஏற்கனவே, வரும் மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பாவில் உள்ள கிட்டதட்ட 50% பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "இந்த கொரோனா பெருந்தொற்று இன்னும் முடியும் நிலைக்கு நெருங்கக் கூட இல்லை. குறிப்பாக சில நாடுகளில் வேக்சின் போடப்படும் விகிதம் குறைவாக உள்ளது கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஏனென்றால் வேக்சின் செலுத்தாதவர்களுக்கு தான் ஓமிக்ரான் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஓமிக்ரான் லேசானது இல்லை
ஓமிக்ரான் சற்று குறைவான பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் இது ஒரு லேசான வைரஸ் பாதிப்பு இல்லை. ஓமிக்ரான் கொரோனாவால் உலகெங்கும் மருத்துவமனைகளில் அட்மிட் ஆவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்புகள் ஏற்படவே செய்கிறது. இது நாம் சோர்ந்து போகும் நேரம் இல்லை. கொரோனா பரவல் அதிகம் உள்ள நாடுகளுக்கு நாம் உதவ வேண்டும். அப்போது தான் பாதிப்பை நம்மால் குறைக்க முடியும்" என்றார்.
Recommended Video
கொரோனா வைரஸ்
இந்தியாவில் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை மெல்ல 3 லட்சத்தை நெருங்கி வருகிறது. மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியுள்ள போதிலும் மற்ற பகுதிகளில் வைரஸ் வேகமெடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் விரைவில் 2 டோஸ் வேக்சின் போட்டுக்கொள்ள வேண்டும் எனச் சுகாதார வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.