உக்ரைனில் மலேசிய விமானத்தை யார் தான் தாக்கியது?
மாஸ்கோ: மலேசிய விமானம் எம்.ஹெச். 370 மாயமான சில மாதங்களில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் கிளம்பியது. விமானத்தில் 283 பயணிகள் மற்றும் 15 சிப்பந்திகள் என மொத்தம் 298 பேர் இருந்தனர்.
விமானம் உக்ரைன் வழியாக மலேசியா செல்கையில் தான் யாருமே எதிர்பாராத அந்த சம்பவம் நடந்தது.
ஏவுகணை
உக்ரைன், ரஷ்ய எல்லையில் உள்ள டோனட்ஸ்க் பகுதியில் விமானம் பறக்கையில் அது பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது.
பலி
விமானம் தாக்கப்பட்டத்தில் அதில் இருந்த 298 பேரும் உடல் சிதறி பலியாகினர். விமானம் தாக்கப்பட்ட டோனட்ஸ்க் ரஷ்ய ஆதரவு போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி ஆகும்.
ரஷ்யா
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பக் ஏவுகணையை வைத்து அந்நாட்டு ஆதரவு போராளிகள் தான் விமானத்தை தாக்கினர் என உக்ரைன் அரசு தெரிவித்தது. ஆனால் இதை ரஷ்யா மறுத்ததுடன் உக்ரைன் தான் விமானத்தை தாக்கியது என்று தெரிவித்தது.
அமெரிக்கா
மலேசிய விமானத்தை ரஷ்யா தான் தாக்கியிருக்கக்கூடும் என்று அமெரிக்காவே தெரிவித்தது. இருப்பினும் விமானத்தை தாங்கள் தாக்கவில்லை என்று ரஷ்யா தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
பயணிகள்
விமானத்தில் இருந்த சிப்பந்திகள் அனைவரும் மலேசியர்கள். பயணிகளில் பெரும்பாலானோர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள்.
மீட்பு
விமானம் விழுந்த இடத்தில் சிதறிக் கிடந்த உடல்கள் மீட்கப்பட்டு மலேசியா மற்றும் நெதர்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விசாரணை
விமானம் தாக்கப்பட்ட விவகாரம் பற்றி விசாரணை நடத்த நெதர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.