கொரோனா தோற்றம்... ஆராய்ச்சியாளர்களை ஒரு வழியாக அனுமதித்த சீனா... ஆனால் ஹோட்டலைவிட்டு வெளியேற தடை
வூஹான்: கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா சென்றுள்ள ஆராய்ச்சியாளர்கள், கட்டாய தனிமைப்படுத்துதல் விதி காரணமாக ஹோட்டலிலேயே முடங்கியுள்ளனர்.
சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உலகெங்கும் பரவிய இந்த வைரஸ் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வைரஸை சீனா திட்டமிட்டுப் பரப்பியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் குற்றஞ்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்த சீனா, இது குறித்த உலக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று உறுதியளித்து.
கொரோனா வைரஸ் தோற்றம்
கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பட்டாலும், இந்த வைரஸ் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் வரும் காலங்களில் இதுபோன்ற வைரஸ் பரவல் ஏற்படாமல் இருக்கவும் கொரோனாவின் தோற்றம் குறித்துக் கண்டறிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதற்காக உலக சுகாதார அமைப்பின் விலங்கு நோய்கள் பிரிவின் உயர் நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இழுபறிக்குப் பின் அனுமதி
இந்தக் குழு ஜனவரி மாத தொடக்கத்திலேயே சீனா செல்லவிருந்தது. இருப்பினும், இக்குழுவுக்குத் தேவையான அனுமதியைத் தராமல் சீனா இழுத்தடித்தது. இதற்கு உலக சுகாதார அமைப்பு கடும் அதிருப்தி தெரிவித்த பிறகே, இக்குழுவுக்குச் சீனா அனுமதி அளித்தது. அதன்படி ஆராய்ச்சியாளர்கள் நேற்று சீனா சென்றனர். அதிலும் இருவருக்குச் சீனா செல்ல அனுமதி கடைசி நேரத்தில் மறுக்கப்பட்டது. இருவரும் கொரோனா நேகடிவ் சான்றிதழ் தரவில்லை என்றும் இதனாலேயே அவர்கள் இருவருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
வெளியேற அனுமதி இல்லை
சீனாவில் தற்போது வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் தங்களை தாங்களே 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த விதி ஆராய்ச்சியாளர்களுக்கும் பொருந்தும் என்பதால், தற்போது சீனா சென்றுள்ள ஆராய்ச்சியாளர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். தனிமைப்படுத்திக் கொள்ளும் காலம் முடிந்த பிறகு வூஹான் நகருக்குள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியலைத் தள்ளி வைக்க வேண்டும்
தற்போது ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் வீடியோ கால் மூலமே ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுகள் சர்வதேச அரசியல் அரங்கிலும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது போன்ற விஷயங்களில் அரசியல் இருப்பது சகஜம்தான் என்று ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த டொமினிக் டுவயர் தெரிவித்தார். இருப்பினும், ஆய்வாளர்கள் சரியான ஆய்வுகள் மூலம் தேவையான தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் மக்களால் சரியான முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.