சீனாவில் கொரோனா எப்படி தோன்றியது.. கண்டுபிடிக்க முடியாமலே போகலாம்.. உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்
ஜெனிவா: கொரோனா வைரசின் தோற்றம் குறித்து இறுதி வரை கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அடுத்த 100 நாட்களில் அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் வல்லுநர் குழு சீனாவிலுள்ள வூஹான் நகருக்குச் சென்றுள்ளது. தற்போது தனிமைப்படுத்தும் காலத்திலுள்ள அக்குழு, விரைவில் கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுகளைத் தொடங்கவுள்ளனர்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் அவசர குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், தற்போது கொரோனா உயிரிழப்பு திடீரென்று அதிகரித்துள்ளதால் இந்தக் கூட்டம் தற்போது நடைபெற்றது.
கண்டுபிடிக்க முடியாமலே போகலாம்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீனாவிலுள்ள வல்லுநர் குழுவும் பங்கேற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் எவ்வாறு தோன்றியிருக்கும், முதலில் யார் இதனால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் போன்ற தகவல்களை நம்மால் கண்டுபிடிக்க முடியாமலேயே போகலாம் என்று தெரிவித்துள்ளது.
நாடுகளைக் குறிக்காமல் பெயர்
கொரோனாவின் புதிய வகைகள் குறித்த ஆய்வுகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. வரும் காலங்களில் வைரசின் புதிய பகுதிகளுக்குப் பெயர் வைக்கும்போது, எந்த ஒரு நாட்டையும் குறிக்கும் வகையில் இல்லாமல் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வேகமாகப் பரவும் புதிய வகைகள்
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரக்கால இயக்குநர் மைக்கேல் ரியான் கூறுகையில், "உலகில் புதிய வகை கொரோனா வைரஸ்கள் வேகமாகப் பரவுகின்றன. பிரிட்டன் கொரோனா வைரஸ் இதுவரை 50 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல தென் ஆப்பிரிக்க வைரஸ் 20 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிரேசில் வைரஸ் தற்போது அப்பகுதியில் வேகமாக பரவிவருகிறது. ஆனால், வைரஸ் பரவல் அதிகரிக்க இதுபோன்ற உருமாறிய வகைகள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. மக்கள் சரியாக மாஸ்க்குகளை அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததும் இதற்குக் காரணம்" என்றார்.
100 நாட்களில் தொடங்க வேண்டும்
கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் உலகம் இப்போது ஒரு முக்கிய தருணத்தில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறினார். மேலும், "தடுப்பூசிகளை உலகம் முழுவதும் சமமாக விநியோகிக்க வேண்டும். தற்போது உலகெங்கும் 36 நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவைகளில் 28 நாடுகள் அதிக வருமானம் உள்ள நாடுகள். இந்த நிலை மாற வேண்டும், அடுத்த 100 நாட்களில் அனைத்து நாடுகளிலும் உள்ள முன் களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்" என்றார்.