எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே ஒத்துழைப்பு தராங்க... சீனாவை பாராட்டி தள்ளும் உலக சுகாதார அமைப்பு
பெய்ஜிங்: கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வூஹான் சென்றுள்ள வல்லுநர் குழுவிற்குச் சீனா சிறப்பான ஒத்துழைப்பை அளிப்பதாக அக்குழுவில் இடம் பெற்றுள்ள ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த வைரசின் தோற்றம் குறித்துக் கண்டுபிடிக்க வேண்டியது முக்கியம் என கடந்த சில மாதங்களுக்கு முன் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இதற்காக உலக சுகாதார அமைப்பின் விலங்கு நோய்கள் பிரிவின் உயர் நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளக் கடந்த மாதம் சீனா சென்ற வல்லுநர் குழு, தனிமை காலம் முடிந்ததும் தனது ஆய்வுப் பணிகளைத் தொடங்கியது. வூஹான் சந்தை, வைரலாஜி மையம், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களிலும் வல்லுநர் குழு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
சீன அனுமதி
இந்நிலையில், இந்த வல்லுநர் குழுவில் இடம் பெற்றுள்ள பீட்டர் தாஸ்ஸாக் கூறுகையில், "நாங்கள் இங்கு வந்ததும், எங்கெல்லாம் விசாரணை நடத்த வேண்டும் என்ற பட்டியலை எங்களிடம் சீன அரசு கேட்டது. நாங்கள் எங்கள் பட்டியலை அளித்தோம். எந்த கட்டுப்பாடுமின்றி நாங்கள் விசாரணை நடத்த விரும்பிய அனைத்து இடங்களுக்கும் எங்களைச் சீன அரசு செல்ல அனுமதித்தது" என்றார்.
மறுப்பு
கடந்த சில நாட்களாகவே வூஹான் காட்டு விலங்கு சந்தை, வூஹான் வைரலாஜி மையம் என முக்கிய இடங்களில் இந்தக் குழு தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது. தற்போது சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டுள்ள இந்தக் குழு ரிப்போட்டை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இப்போதுதான் ரிப்போர்ட்டை உருவாக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளதால், ஆய்வு குறித்துக் கூடுதல் தகவல்களைப் பகிர பீட்டர் தாஸ்ஸாக் மறுத்துவிட்டார்.
வைராலஜி மையம்
வூஹானிலுள்ள வைராலஜி மையத்திலிருந்தே இந்த வைரசை சீன அரசு திட்டமிட்டுப் பரப்பியதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்நிலையில் வைராலஜி மையத்தில் ஆய்வு செய்தது குறித்துப் பேசிய பீட்டர் தாஸ்ஸாக், "வைராலஜி மையத்தில் நான் எதிர்பார்த்ததைவிட விட சுதந்திரமாகவே விசாரணை செய்ய முடிந்தது. இந்த வைரலாஜி மைய விஷயம் அரசியலாக்கப்பட்டுவிட்டது. இதனால் தங்கள் மீது தவறு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டி அழுத்தம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டுள்ளது. இதன் காரணமாக எங்கள் குழுவுக்குச் சிறப்பான ஒத்துழைப்பை வைராலஜி மைய ஊழியர்கள் வழங்கினர்" என்றார்.
விலங்கு சந்தை
முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து அவர் கூறுகையில், "முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களுடன் உரையாடினோம். அதேபோல காட்டு விலங்கு சந்தைகளிலும் தீவிர ஆய்வை மேற்கொண்டோம். அங்குள்ள வியாபாரிகளிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டோம். அவர்களுடன் சுதந்திரமாகவே உரையாடினோம். இதன் மூலம் கொரோனா குறித்து எங்களால் மிக ஆழமான ஒரு ஆய்வை மேற்கொள்ள முடிந்தது" என்று அவர் கூறினார்.
கொரோனா பாதிப்பு
சீனாவில் தொடங்கி கொரோனா வைரஸ் தற்போது உலகின் அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது. கொரோனா பரவல் ஏற்பட்டவுடன் சீனா 76 நாட்கள் கடுமையான ஊரடங்கை அறிவித்தது. இதன் காரணமாக அந்நாட்டில் விரைவில் கட்டுக்குள் வந்தது. இருப்பினும், உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் இன்னும் கொரோனா பாதிப்பிலிருந்து மீளவில்லை. உலகெங்கும் தற்போது வரை 10.60 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 23.11 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்,