கொரோனா தோற்றம்... வூஹான் விலங்கு சந்தையில்... தீவிர விசாரணையில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள்
வூஹான்: கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா சென்றுள்ள ஆராய்ச்சியாளர்கள், வூஹான் விலங்கு சந்தை உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், மெல்ல உலகெங்கும் பரவிய இந்த வைரஸ் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரோனாவைச் சீனா திட்டமிட்டுப் பரப்பியதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்த சீனா, கொரோனா தோற்றம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலக ஆராய்ச்சியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க தயாராக உள்ளதாக அறிவித்தது.
கொரோனா வைரஸ் தோற்றம்
கொரோனாவுக்கு ஃபைசர், மாடர்னா உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த வைரஸ் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் வரும் காலங்களில் இதுபோல மீண்டும் ஒரு வைரஸ் பரவல் ஏற்படாமல் இருக்கவும் கொரோனா தோற்றம் குறித்துக் கண்டறிய வேண்டியது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதற்காக உலக சுகாதார அமைப்பின் விலங்கு நோய்கள் பிரிவின் உயர் நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது.
இழுபறிக்குப் பின் அனுமதி
இம்மாத தொடக்கத்திலேயே சீனாவில் ஆய்வுகளை மேற்கொள்ள இந்தக் குழு திட்டமிட்டிருந்தது. இருப்பினும், இக்குழுவுக்குத் தேவையான அனுமதியைத் தராமல் சீனா இழுத்தடித்தது. சீனாவின் இந்தச் செயல்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு கடும் அதிருப்தி தெரிவித்த பிறகே, இக்குழுவுக்குச் சீனா அனுமதி அளித்தது. சீனா சென்ற வல்லுநர் குழு தனிமைப்படுத்தப்படும் காலம் முடிந்து நேற்று முன்தினம் தங்கள் ஆய்வு பணிகளைத் தொடங்கினர்.
விலங்கு சந்தையில் ஆய்வு
இந்நிலையில், இரண்டாவது நாளில் வூஹான் நகரிலுள்ள மிகப் பெரிய விலங்கு சந்தையில் வல்லுநர் குழு தங்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்களுடன் நூற்றுக்கணக்கான சீன அதிகாரிகளும் உடன் சென்றனர். முன்னதாக, ஹூபெய் ஒருங்கிணைந்த சீன மற்றும் மேற்கத்திய மருத்துவமனைக்கும் ஜின்யந்தன் மருத்துவமனைக்கும் ஆராய்ச்சியாளர்கள் சென்றிருந்தனர். இந்த இரு மருத்துவமனைகளிலும்தான் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்குளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
வைராலஜி மையத்திற்கு செல்லும் ஆய்வாளர்கள்
அதேபோல முதலில் கொரோனா வைரஸ் பரவியதாகக் கருதப்படும் வூஹான் கடல் உணவு சந்தையில் இன்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். மேலும், வூஹானிலுள்ள வைராலஜி மையத்திலும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர். கொரோனாவின் தோற்றம் குறித்து அறிந்து கொள்ள இந்த ஆய்வுகள் முக்கியமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இந்த ஒரே பயணத்தில் கொரோனா தோற்றம் குறித்து முழுத் தகவல்களை அறிந்துகொள்ள முடியாது என்றும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியலைத் தள்ளி வைக்க வேண்டும்
கொரோனா தோற்றம் குறித்த ஆய்வுகள் சர்வதேச அரசியல் அரங்கிலும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது போன்ற விஷயங்களில் அரசியல் இருப்பது சகஜம்தான் என்று ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த டொமினிக் டுவயர் தெரிவித்தார். இருப்பினும், ஆய்வாளர்கள் சரியான ஆய்வுகள் மூலம் தேவையான தகவல்களை அளிக்க வேண்டும் என்றும் அப்போதுதான் மக்களால் சரியான முடிவுகளை எடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.