ரொம்ப தப்புங்க... கொரோனா வல்லுநர்களை அனுமதிக்க மறுக்கும் சீனா... அதிருப்தியில் உலக சுகாதார அமைப்பு
ஜெனிவா: கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா செல்லும் வல்லுநர் குழுவுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படாததற்கு உலக சுகாதார அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் மெல்ல உலகெங்கும் பரவ தொடங்கியது.
தற்போது இந்த தொற்றுக்குத் தடுப்பூசி கண்டறியப்பட்டு, அதை வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
வைரசின் தோற்றம்
இந்நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் அதன் தீவிர தன்மை குறித்துப் புரிந்து கொள்ளவும் கொரோனா வைரசின் தோற்றம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்று சில மாதங்களுக்கு உலக சுகாதார அமைப்பு முன் கூறியது. இதற்காக உலக சுகாதார அமைப்பின் விலங்கு நோய்கள் பிரிவின் உயர் நிபுணர் பீட்டர் பென் எம்பரேக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. முதல் கட்ட ஆராய்ச்சிக்காக பீட்டர் பென் எம்பரேக் கடந்த ஜூலை மாதம் சீனாவுக்கு சென்றிருந்தார்.
அனுமதி இல்லை
இந்நிலையில், கொரோனா வைரசின் தோற்றம் குறித்து அடுத்தகட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பின் 10 பேர் கொண்ட வல்லுநர் குழு இம்மாத தொடக்கத்தில் சீனா செல்வதாக இருந்தது. இருப்பினும், இக்குழு சீனாவுக்குள் நுழைய அந்நாட்டு இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
ரொம்ப முக்கியம்
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில்,"எங்கள் நிபுணர் குழுவுக்குத் தேவையான அனுமதியைச் சீனா இன்னும் வழங்கவில்லை. இது குறித்து நான் சீனாவில் இருக்கும் சில மூத்த அதிகாரிகளுடன் பேசினேன். அவர்களிடம், இந்த ஆய்வுப் பணிகள் உலக சுகாதார அமைப்பிற்கு மிகவும் முக்கியமானது என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்தினேன்" என்றார்.
சீனா உத்தரவாதம்
சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருக்கும் வூஹான் நகரிலேயே இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸை சீனா திட்டமிட்டு உருவாக்கியதாகவும் செய்திகள் உலா வர தொடங்கின. இதை முற்றிலும் மறுத்த சீனா, வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா எப்போதும் சர்வதேச ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை அளிக்கும் என்று தெரிவித்திருந்தது.
உலக சுகாதார அமைப்பு செயல்பாடு
வைரஸ் பரவலின் ஆரம்பக்கட்ட நாட்களில் சீன மிக மோசமாகச் செயல்பட்டதாக அந்நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் விமர்சனங்களை முன் வைத்தன. மேலும், வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கைகளை அறிவிப்பதிலும், நடவடிக்கைகளை எடுப்பதிலும் உலக சுகாதார அமைப்பு சரியாகச் செயல்படவில்லை என்று கூறி, அமெரிக்கா அந்த அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது.
கொரோனா பாதிப்பு
உலகெங்கும் கடந்த 24 மணி நேரத்தில் 6.82 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 8.68 கோடியாக ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 18.74 லட்சத்தைக் கடந்துள்ளது.